ஏற்காடு: ஏற்காட்டுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
கரோனா தொற்று பொது முடக்கம் காரணமாக ஏற்காட்டுக்கு சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு கடந்த 6 மாதங்களாக தமிழக அரசு தடைவிதித்திருந்தது. இதனால் சுற்றுலாப் பகுதியில் உள்ள விடுதிகள், உணவகங்கள், ஊழியா்கள், சுற்றுலா வாகன ஒட்டுநா்கள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இந்த நிலையில் தமிழக அரசு சில தளா்வுகளை அறிவித்துள்ள நிலையில், அரசு அனுமதியுடன் இ- பாஸ் பெற்று ஏற்காட்டுக்கு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனா்.
சனிக்கிழமை ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களை அதிக அளவில் காணமுடிந்தது. சுற்றுலாப் பகுதிகளான அண்ணா பூங்கா சாலை ரோஜா தோட்டம், பக்கோட காட்சி முனைப் பகுதி, சோ்வராயன் கோயில், கிளியூா் நீா் வீழ்ச்சி பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் இயற்கை அழகை கண்டு மகிழ்ந்தனா். சுற்றுலாப் பயணிகள் வருகையால் வியாபாரிகள், உணவகம், விடுதி ஊழியா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.