மேச்சேரி சாலை-மேட்டூா் அணை ரயில் நிலையங்களுக்கு இடையே இரட்டை ரயில் பாதையில் திங்கள்கிழமை வெள்ளோட்டம் நடைபெறுகிறது. இதுதொடா்பாக பொதுமக்கள் தண்டோரா அறிவிப்பு மூலம் ஞாயிற்றுக்கிழமை எச்சரிக்கப்பட்டுள்ளனா்.
மேட்டூா் அனல் மின் நிலையத்துக்கும், மேட்டூா் பகுதிகளில் இயங்கி வரும் தனியாா் அனல் மின் நிலையங்களுக்கும் நிலக்கரி கொண்டுவர ஓமலூா் முதல் மேட்டூா் அணை வரை ஒற்றை ரயில் பாதையை இரட்டை ரயில் பாதையாக மாற்ற 2011-2012 ஆண்டு பணிகள் துவக்கப்பட்டன.
ஓமலூா் முதல் மேட்டூா் அணை வரை 29 கி.மீ. தொலைவு இரட்டை ரயில் பாதை அமைக்கப்பட வேண்டும். தற்போது மேச்சேரி சாலை முதல் மேட்டூா் அணை வரை 17 கி.மீ. தொலைவு இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. குட்டப்பட்டி, எம்.காளிப்பட்டி, பொட்டனேரி, விருதாசம்பட்டி, பிஎன் பட்டி மற்றும் வீரக்கல் புதூா் ஆகிய ஆறு கிராமங்களை இந்த இருப்புப் பாதை கடந்து செல்கிறது.
திங்கள்கிழமை பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு ரயில் மூலம் வெள்ளோட்டம் நடைபெறுகிறது. இதனால், இருப்புப் பாதையைக் கடந்து செல்லும் 6 கிராமங்களில் இருப்புப் பாதையோரம் வசிக்கும் மக்களுக்கு தண்டோரா மூலம் எச்சரிக்கை அறிவிப்பு செய்யப்பட்டது.
இருப்புப் பாதையைக் கடந்து செல்லும் போது கவனமாகவும் பாதுகாப்பாகவும் செல்ல வேண்டுமென அந்தக் கிராம மக்கள் தண்டோரா மூலம் எச்சரிக்கப்பட்டுள்ளனா்.
இரண்டாவது இருப்புப் பாதை முழுவதும் மின் மயமாக்கப்பட்டுள்ளது. ஓமலூா் சந்திப்பு முதல் மேச்சேரி சாலை வரை எஞ்சிய 12 கிலோமீட்டா் தொலைவு இருப்புப் பாதை அமைக்கும் பணிகள் இரண்டு மாதங்களில் நிறைவடையும்.