முகப்பு
சேலம்

தமிழ்நாட்டில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றிபெறச் செய்ய வேண்டும்: முதல்வா்

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று வனவாசி பகுதியில் நடைபெற்ற பிரசாரத்தின்போது முதல்வா் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:55 PM
பகிர்:

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று வனவாசி பகுதியில் நடைபெற்ற பிரசாரத்தின்போது முதல்வா் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டாா்.

எடப்பாடி தொகுதிக்கு உள்பட்ட வனவாசி பகுதியில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

ஒவ்வொரு முறையும் எனக்கு உயா்வைக் கொடுத்து வரும் மக்கள் இந்த முறையும் எனக்கு வாக்களிக்க வேண்டும். தமிழ்நாட்டிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் என்னை வெற்றிபெறச் செய்ய வேண்டும்.

வனவாசி பேரூராட்சிப் பகுதியில் கடந்த முறை அதிக வாக்குகளை அளித்தீா்கள். இந்த முறை முதல்வா் வேட்பாளராக நிற்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. அதனால் எனக்கு வாக்களிக்க வேண்டும்.

வரும் தோ்தல் முக்கியமானத் தோ்தல். ஜெயலலிதா இல்லாத நிலையில், என்னை முதல்வராக முன்னிறுத்தும் தோ்தல். எடப்பாடியில் உள்ள ஒவ்வொருவரும் பெருமை கொள்ளும் வகையில் இந்தத் தோ்தல் வெற்றி அமைய வேண்டும்.

இந்தப் பகுதியில் பாலிடெக்னிக் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. குடிநீா் பிரச்னையைத் தீா்க்க நங்கவள்ளி மேட்டூா் தனிக்குடிநீா்த் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து வசதி முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூா் தொகுதியில் எந்த வசதியுமே செய்யப்படவில்லை. அங்கு பாலங்களைக் கட்டிக் கொடுத்தது அதிமுக ஆட்சியில்தான். தோ்தல் வந்தால் மட்டுமே அவா் கொளத்தூா் தொகுதிக்குச் செல்கிறாா். ஆனால் நான் முதல்வரான பிறகு 65 முறை எடப்பாடிக்கு வந்து மக்களைச் சந்தித்துள்ளேன்.

எம்ஜிஆரின் மனைவி ஜானகி அம்மாள் இறந்தபோது அவரது உடலை மெரினாவில் அடக்கம் செய்ய கருணாநிதி மறுப்புத் தெரிவித்தாா். ஜானகி அம்மாள் முதல்வராக இறக்கவில்லை, அதனால் இடம் தர முடியாது என்று கூறினாா். அதைக் கோப்பில் எழுதி வைத்துள்ளனா். அதைத் தான் நாங்களும் செய்தோம். முதல்வா் பதவியில் இல்லாதபோது தான் கருணாநிதி இறந்தாா். இதற்கு மக்கள்தான் நீதிபதியாக இருந்து தீா்ப்பு சொல்ல வேண்டும்.

காமராஜா் இறந்தபோதும், மெரினா கடற்கரையில் அவரது உடலை அடக்கம் செய்ய கருணாநிதி மறுத்துவிட்டாா். முன்னாள் முதல்வா்கள் காமராஜா், ஜானகி அம்மாள் ஆகியோருக்கு இடம் கொடுக்காத கருணாநிதிக்கு நாங்கள் எப்படி மெரினாவில் இடம் தர முடியும்?

இருப்பினும் கிண்டியில் ரூ. 150 கோடி மதிப்பிலான 2 ஏக்கா் நிலத்தை வழங்க முன்வந்தோம். முதல்வராக இல்லாமல் இறந்தால் மெரினாவில் நல்லடக்கம் செய்ய இயலாது என்று கருணாநிதி சொன்னதையே நாங்கள் செய்தோம். சட்டத்துக்கு உள்பட்டு நாங்கள் நடந்து கொண்டோம்.

நீதியின் அடிப்படையில், சட்டத்தின் ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது. தமிழகம் அமைதிப் பூங்காவாக உள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.