காரிப்பட்டியில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தின் கிழக்குப் பகுதியிலுள்ள ஆத்தூா், நரசிங்கபுரம் நகராட்சிகள், வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், பேளூா், ஏத்தாப்பூா், பெத்தநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பேரூராட்சிகள் உள்பட அனைத்து கிராமங்களுக்கும் மேட்டூரில் இருந்து காவிரி நீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது. குடிநீா் வரும் பழுதடைந்த சிமென்ட் கான்கிரீட் குழாய்களுக்கு மாற்றாக, உறுதியான இரும்புக் குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
சேலம், உடையாப்பட்டியில் இருந்து காரிப்பட்டி வரை கடந்த இரு மாதங்களுக்கு முன் இரும்புக் குழாய் பதிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அதற்காக, மரப்பாலத்தில் இருந்து காவலா் குடியிருப்பு வரை ஏறக்குறைய 2 கி.மீ. தொலைவுக்கு பிரதான தாா் சாலை தோண்டப்பட்டது. இரு மாதங்கள் கடந்தும் தோண்டப்பட்ட சாலை சீரமைக்கப்படவில்லை.
இதனால், இச்சாலை குண்டும் குழியுமாக மாறியதோடு மழையால் சேறும் சகதியுமானதால் இப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். எனவே, இச்சாலையை புதுப்பித்துக் கொடுக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.