முகப்பு
சேலம்

கொளத்தூர்: யானை தூக்கி வீசியதில் தொழிலாளி படுகாயம்

​சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கொளத்தூரில் யானை தூக்கி வீசியதில் தொழிலாளி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:55 AM
கோப்புப்படம்
பகிர்:


சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கொளத்தூரில் யானை தூக்கி வீசியதில் தொழிலாளி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

மேட்டூரை அடுத்த கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது நீதிபுரம் ஏரி. இந்த ஏரி அடர்ந்த வனப் பகுதியில் அமைந்துள்ளது. ஏரியில் மீன் பிடிக்க குத்தகைக்கு எடுத்தவர் அதே பகுதியைச் சேர்ந்த தேவராஜ் (38) என்பவரை காவலுக்காக நியமித்திருந்தார். 

நேற்று (சனிக்கிழமை) இரவு தேவராஜ் ஏரிக்கரையில் உள்ள கொட்டகையில் படுத்து இருந்தார். அப்போது சப்தம் கேட்கவே எழுந்து பார்த்த அவர் தனது கையிலிருந்த டார்ச் லைட்டை அடித்துப் பார்த்தார். மிக அருகில் ஒற்றை ஆண் யானை ஒன்று நின்றிருந்திருக்கிறது. இவர் சுதாரிப்பதற்குள் யானை துதிக்கையால் தூக்கி அவரை அருகிலிருந்த விவசாய நிலத்தில் வீசியது. பின்னர் பிளிறியபடி யானை அங்கிருந்து சென்றது. 

தேவராஜனின் அலறல் கேட்டு கிராம மக்கள் தீப்பந்தங்கள் உடன் வந்து அவரை மீட்டு மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து வருவாய்த் துறை மற்றும் வனத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →