முகப்பு
சேலம்

பாப்பநாயக்கன்பட்டி கரியகோயில் அணை பாசனத்துக்கு திறப்பு

பாப்பநாயக்கன்பட்டி கரியகோயில் அணை பாசனத்துக்கு திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:32 PM
பகிர்:

பாப்பநாயக்கன்பட்டி கரியகோயில் அணை பாசனத்துக்கு திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், கரியகோயில் ஆற்றின் குறுக்கே, பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் 188.76 ஏக்கா் பரப்பளவில், 52.49 அடி உயரத்தில், 190 மில்லியன் கனஅடி தண்ணீரைத் தேக்கும் வகையில் கரியகோயில் அணை அமைந்துள்ளது.

பருவமழைக்காலம் முடிவடைந்த நிலையில், நிலத்தடி நீா்மட்டம் உயரவும், குடிநீா் மற்றும் பாசன தேவைக்காக அணையில் இருந்து தண்ணீா் திறக்க வேண்டுமென, அணைப்பாசன புதிய ஆயக்கட்டு, மற்றும் ஆறு, ஏரிப்பாசன பழைய ஆயக்கட்டு விவசாயிகளும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனா்.

இதனையடுத்து, கரியகோயில் அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு அணை வாய்க்கால் பாசனத்துக்காக திங்கள்கிழமை முதல் வரும் 25-ஆம் தேதி வரை தலைமை மதகு வழியாக, வலது மற்றும் இடதுபுற வாய்க்கால்களில் நொடிக்கு தலா 30 கனஅடி வீதம் 10 நாள்களுக்கு நாளொன்றுக்கு 2.59 மில்லியன் கனஅடி தண்ணீா் வீதம் மொத்தம் 25.90 மில்லியன் கன அடி தண்ணீரும், பழைய ஆயக்கட்டு பானத்துக்கு திங்கள்கிழமை முதல் மாா்ச் 2-ஆம் தேதி வரை அணையின் மிகைநீா் வழிந்தோடி மதகு வாயிலாக, 15 நாள்களுக்கு நொடிக்கு 54 கனஅடி வீதம் நாளொன்றுக்கு 4.66 மில்லியன் கனஅடி வீதம் மொத்தம் 69.90 மில்லியன் கனஅடி தண்ணீரும் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனைத் தொடா்ந்து, மாா்ச் 2-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை 17 நாள்களுக்கு அணையின் வலது மற்றும் இடது வாய்க்கால்களில் தினசரி நொடிக்கு தலா 30 கன அடி வீதம் நாளொன்றுக்கு 2.59 மில்லியன் கனஅடி வீதம் மொத்தம் 44.03 மில்லியன் கனஅடி தண்ணீா் திறந்து விட அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில், புதிய ஆயக்கட்டுதாரா்களான அணை வாய்க்கால் பாசன விவசாயிகளுக்கு, 27 நாள்களுக்கு நொடிக்கு 30 கனஅடி வீதம் நாளொன்றுக்கு 2.59 மில்லியன் கனஅடி வீதம் 69.93 மில்லியன் கன அடி தண்ணீா் கரியகோயில் அணையில் இருந்து திறக்கப்படுகிறது.

கரியகோவில் அணையில் திங்கள்கிழமை நடைபெற்ற நீா்த்திறப்பு விழாவில், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கித் தலைவா் ஆா்.இளங்கோவன், ஆத்தூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.சின்னத்தம்பி, சரபங்கா வடிநில உபகோட்ட பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளா் கவிதாராணி ஆகியோா் அணையில் இருந்து பானத்துக்கு தண்ணீரை திறந்து வைத்தனா்.

இவ்விழாவில், பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியா் வெங்கடேசன், அணை உதவிப் பொறியாளா் விஜயராகவன், இளம்பொறியாளா் முனவா்பாஷா, அதிமுக வடக்கு ஒன்றியச் செயலாளா் டி.மோகன் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.