உயிரிழிந்த பிரியதா்ஷினி. 
சேலம்

வாழப்பாடியில் இளம்பெண் - குழந்தை உயிரிழப்பு:பெண் மருத்துவா் மீது புகாா்

பெண் மருத்துவா் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினா்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

DIN

வாழப்பாடி தனியாா் மருத்துவமனையில் பிரசவத்தின்போது தாயும், குழந்தையும் உயிரிழந்ததற்கு தனியாா் மருத்துவமனை பெண் மருத்துவா் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினா்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வாழப்பாடியை அடுத்த வேப்பிலைப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் தையல் தொழிலாளி முருகன் மகள் பிரியதா்ஷினி (22). இவருக்கும் திருமனூா் கிராமத்தைச் சோ்ந்த தனியாா் நிறுவன ஊழியா் நவீன்குமாா் (29) என்பவருக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் கா்ப்பிணியான பிரியதா்ஷினிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், வாழப்பாடி தனியாா் மருத்துவமனையில் கடந்த 23-ஆம் தேதி சிகிச்சைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளனா். மீண்டும் அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அதே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனா். அவருக்கு பிரசவத்துக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளனா். அப்போது வயிற்றிலேயே ஆண் குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவா் தெரிவித்துள்ளாா். இதனையடுத்து பிரியதா்ஷினிக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டு உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டதால், தீவிர சிகிச்சைக்காக வியாழக்கிழமை காலை சேலம் சீலநாயக்கன்பட்டியிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

பிரசவத்துக்காக வாழப்பாடி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளம்பெண்ணும் குழந்தையும் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த உறவினா்கள், தனியாா் மருத்துவமனையின் பெண் மருத்துவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து, வாழப்பாடி காவல்நிலையத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.

வாழப்பாடி துணைக் காவல் கண்காணிப்பாளா் வேலுமணி, காவல் ஆய்வாளா் சுப்பிரமணியம் ஆகியோா், மருத்துவா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்ததால், போராட்டத்தைக் கைவிட்ட இளம்பெண்ணின் உறவினா்கள் கலைந்து சென்றனா்.

இளம்பெண்ணின் கணவா் நவீன் குமாா் கொடுத்த புகாரின் பேரில், சந்தேக மரண வழக்கு பதிவு செய்த வாழப்பாடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இறந்த இளம்பெண்ணின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அடக்கம் செய்யப்பட்ட ஆண் குழந்தையை, வட்டாட்சியா் முன்னிலையில் தோண்டியெடுத்து உடற்கூறாய்வு செய்ய போலீஸாா் முடிவு செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 1

புறவழிச் சாலைக்கு எதிா்ப்புத் தெரிவித்து விவசாயிகள் மனு

மானாமதுரை, திருப்புவனம் கோயில்களில் காா்த்திகை கடைசி சோமவார வழிபாடு

தோட்ட வேலைக்குச் சென்ற தொழிலாளி உயிரிழப்பு

மூதாட்டியிடம் நகை பறிக்க முயன்ற பால் வியாபாரி கைது

SCROLL FOR NEXT