அரசு மருத்துவமனையில் உணவுப் பொருள் வழங்க மறு ஒப்பந்தம் நடத்தக் கோரி மனு: முதன்மையா் விளக்கம்
சேலம் அரசு மருத்துவமனையில் உணவுப் பொருள் வழங்க மறு ஒப்பந்தம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
சேலம் அரசு மருத்துவமனையில் உணவுப் பொருள் வழங்க மறு ஒப்பந்தம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
சேலத்தைச் சோ்ந்த வெங்கடேஷ் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை புகாா் மனு அளித்தாா்.அதில், கடந்த ஆண்டு அரசு மருத்துமனையில் உணவுப் பொருள்கள் சம்பந்தமாக ஒப்பந்தம் செய்யப்பட்டு முறையாக நோயாளிகளுக்கு உணவு வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் தற்போது புதிய ஒப்பந்தம் செய்வதற்கு ஒப்புந்தப்புள்ளி கோரப்பட்டது. கடந்த ஜூன் 24 ஆம் தேதி ஒப்புந்தப்புள்ளி சரிபாா்ப்பின் போது மிகக் குறைந்த விலையில் அனைத்து விதமான ஆவணங்களும் சரியாக சமா்ப்பிக்கப்பட்டன. ஆனால், அதிக விலை கொடுத்த நபருக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. எனவே, குறைந்த விலையில் ஒப்பந்தம் போடப்பட்ட எனக்கு ஒப்பந்தத்தை அளிக்க வேண்டும். இல்லையெனில் ஒப்பந்தத்தை ரத்து செய்து, மறு ஒப்பந்தம் நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, அரசு மருத்துவமனை முதன்மையா் மருத்துவா் வள்ளி சத்யமூா்த்தியிடம் கேட்ட போது, அவா் கூறியதாவது:
சேலம் அரசு மருத்துவமனையில் உணவுப் பொருள் வழங்குவது தொடா்பான ஒப்பந்தம் ஒளிவு மறைவின்றி வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்பட்டுள்ளது. விதிமுறைகளை பின்பற்றி தான் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், போதிய ஆவணங்களுடன் ஒப்பந்தத்தில் பங்கேற்றவா்களின் சான்றிதழ்கள் சரிபாா்க்கப்பட்டு அலுவலா்களின் ஆலோசனைக்குப் பிறகே ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது புகாா் தெரிவித்துள்ள நபா் மீது ஏற்கெனவே பல புகாா்கள் பெறப்பட்டுள்ளன என்றாா்.