3-ம் நாளாக பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஐடி, ஆட்டோ பங்குகள் உயர்வு!!
இன்றைய பங்குச்சந்தை வர்த்தக நிலவரம் பற்றி...
இஸ்ரேல் - ஈரான் போரினால் கடந்த வாரம் இந்திய பங்குச்சந்தைகள் கடுமையான சரிவைச் சந்தித்த நிலையில் இந்த வாரம் உயர்வுடன் வர்த்தகமாகின்றன.
தொடர்ந்து 3-ம் நாளாக இன்றும்(மார்ச் 18) பங்குச்சந்தைகள் உயர்வுடன் தொடங்கி வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
காலை 11.30 மணியளவில் சென்செக்ஸ் 790.22 புள்ளிகள் அதிகரித்து 76,862.23 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 231.60 புள்ளிகள் உயர்ந்து 23,812.75 புள்ளிகளில் உள்ளது.
தகவல் தொழில்நுட்பம், ஊடகப் பங்குகள் அதிக லாபம் பெற்றதால், நிஃப்டி50, சென்செக்ஸ் இன்று உயர்வுடன் வர்த்தகமாகின்றன.
நிஃப்டி மிட்கேப், நிஃப்டி ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 1.52 சதவீதம், 1.46 சதவீதம் உயர்ந்தன.
துறைவாரியாக நிஃப்டி ஐடி, ஆட்டோ பங்குகள் மற்ற துறைகளைவிட சிறப்பாகச் செயல்பட்டன. நிஃப்டி மெட்டல் 0.83 சதவீதம் சரிந்து அதிக இழப்பைச் சந்தித்தது.
சென்செக்ஸ் பங்குகளில் ஐடி நிறுவனப் பங்குகள் அதிக லாபம் பெற்றன. மறுபுறம் ஹெச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, டாடா ஸ்டீல், பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்தன.
இன்று பிற்பகலில் வெளியாகவுள்ள அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகிதம் தொடர்பான முடிவுகளுக்கு முதலீட்டாளர்கள் காத்திருக்கின்றனர். இது பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 102 டாலராக உள்ளது.
இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 92.43 ஆக உள்ளது.