முகப்பு
வணிகம்

பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு! ரூ. 6.5 லட்சம் கோடி இழப்பு!

இன்றைய பங்குச்சந்தை வர்த்தக நிலவரம் பற்றி...

Updated On : 13 மார்ச், 2026 at 6:08 AM
பங்குச்சந்தை
பகிர்:

இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரால் பங்குச்சந்தைகள் தொடர்ந்து 3-ம் நாளாக இன்று(மார்ச் 13) கடும் வீழ்ச்சியுடன் வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 75,444.22 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.20 மணியளவில் சென்செக்ஸ் 878.95 புள்ளிகள் குறைந்து 75,155.47 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. அதிகபட்சமாக 1,000 புள்ளிகள் வரை குறைந்தது.

அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 292.75 புள்ளிகள் குறைந்து 23,346.40 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

நிஃப்டி 50 குறியீட்டில் அல்ட்ராடெக் சிமென்ட், லார்சன் & டூப்ரோ, இன்டர்குளோப் ஏவியேஷன், ஹெச்டிஎப்சி வங்கி பங்குகள் அதிக இழப்பைச் சந்தித்தன.

சென்செக்ஸ் 30 பங்குகளில் ஹிந்துஸ்தான் யூனிலீவர், ட்ரென்ட், பாரதி ஏர்டெல், டைட்டன், பஜாஜ் பைனான்ஸ், ரிலையன்ஸ், பவர் கிரிட் ஆகிய நிறுவனங்கள் உயர்ந்தும் மற்ற நிறுவனங்கள் சரிந்தும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

நிஃப்டி மிட்கேப், ஸ்மால்கேப் குறியீடுகள் முறையே 1.89 சதவீதம், 2.16 சதவீதம் சரிந்து வர்த்தகமாகின.

துறைவாரியாக, நிஃப்டி மெட்டல் 4 சதவீதத்திற்கும் மேலாக சரிந்தது. நிஃப்டி எப்எம்சிஜி குறியீடு மட்டும் ஏற்றத்துடன் வர்த்தகமாகிறது. நிஃப்டி ஆட்டோ, பொதுத்துறை வங்கி உள்ளிட்ட மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் மோசமாக செயல்பட்டு வருகின்றன.

தற்போதைய நிலவரப்படி 6.5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று சுமார் 10 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.08 சதவீதம் உயர்ந்து ஒரு பீப்பாய்க்கு 100.54 டாலராக உள்ளது. இஸ்ரேல் - ஈரான் இடையேயான போராலும் கச்சா எண்ணெய் விலை உயர்வாலும் பங்குச்சந்தைகள் இன்றும் சரிவைச் சந்தித்து வருகின்றன.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 92.39 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.

summary

Stock Market: Sensex slumps 880 points, Nifty near 23,300

முழு கட்டுரையைப் படிக்க →