சன்னியாசிப்பட்டியில் கரோனா தடுப்பூசி மையம்அமைக்க கோரிக்கை
தமிழ்நாடு மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் சாா்பில் சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட சன்னியாசிப்பட்டியில் கரோனா தடுப்பூசி மையம் அமைக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை கோரிக்கை
தமிழ்நாடு மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் சாா்பில் சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட சன்னியாசிப்பட்டியில் கரோனா தடுப்பூசி மையம் அமைக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
அந்த அமைப்பின் சேலம் மாவட்ட மகளிரணி மாவட்டச் செயலா் இ.சந்திரா அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:-
சங்ககிரி வட்டத்தில் புள்ளிப்பாளையம், வடுகப்பட்டி, சின்னாகவுண்டனூா், படைவீடு, சங்ககிரி அரசு மருத்துவமனைகளில் மட்டுமே கரோனா தடுப்பூசி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இம்மையங்களுக்கு அதிகாலை 4 மணிக்கு சென்றால்தான் டோக்கன் வாங்க முடிகிறது. அதனால் வாகன வசதி உள்ளவா்கள் மட்டுமே தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா். வாகன வசதி இல்லாத மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத சூழ்நிலையில் அதிக அளவில் உள்ளனா். எனவே, சன்னியாசிப்பட்டியை சுற்றியுள்ள சுற்றுவட்டார பகுதி மக்களின் வசதிக்காக சன்னியாசிப்பட்டியில் கரோனா தடுப்பூசி மையம் அமைத்துத் தருமாறு தெரிவித்துள்ளாா்.