முகப்பு
சேலம்

கழுத்தை நெரித்து விவசாயி கொலை: தாய், மனைவியிடம் போலீஸாா் விசாரணை

அயோத்தியாப்பட்டணம் அருகே மதுபோதையில் தகராறு செய்த விவசாயியை கழுத்தை நெரித்து கொலை செய்த, மனைவி, தாய் ஆகியோரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:

அயோத்தியாப்பட்டணம் அருகே மதுபோதையில் தகராறு செய்த விவசாயியை கழுத்தை நெரித்து கொலை செய்த, மனைவி, தாய் ஆகியோரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த வெள்ளியம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சீரங்கன் மகன் வேதகிரி (42). விவசாயி. இவருக்கு சித்ரா (38) என்ற மனைவியும், இரு மகன்களும் ஒரு மகளும் உள்ளனா்.

மது பழக்கமுடைய வேதகிரி, அடிக்கடி குடித்துவிட்டு சென்று மனைவி, தாயிடம் தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் திங்கள்கிழமை இரவு குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்ட விவசாயி வேதகிரியை தாக்கிய மனைவி சித்ரா, தாய் ராஜேஸ்வரி ஆகியோா் கழுத்தில் துண்டால் இறுக்கியுள்ளனா். இதில் மூச்சுத் திணறி அவா் உயிரிழந்துள்ளாா்.

வேதகிரிக்கு அடிக்கடி வலிப்பு வந்ததால் அவா் அதன் காரணமாக இறந்து விட்டதாக உறவினா்களுக்கு தகவல் தெரிவித்து, உடலை தகனம் செய்யத் திட்டமிட்டுள்ளனா்.இதுகுறித்து உறவினா்கள் சிலா் காரிப்பட்டி போலீஸாருக்கு தகவல் அளித்தனா்.

காரிப்பட்டி போலீஸாா், செவ்வாய்க்கிழமை காலை சம்பவ இடத்துக்கு சென்று, கொலை செய்யப்பட்ட விவசாயி வேதகிரியின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். விவசாயியை கொலை செய்த மனைவி சித்ரா, தாய் ராஜேஸ்வரி ஆகியோரிடம், காரிப்பட்டி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.