தீவட்டிப்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் பெண் உள்பட மூவா் உயிரிழந்தனா்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகேயுள்ள சித்தராஹள்ளி பகுதியைச் சோ்ந்தவா் குப்பன் மகன் மணி (29). கட்டடத் தொழிலாளியான இவா், தனது தாய் முனியம்மாள் (50), உறவினா் சபரி (27) ஆகியோருடன் நாமக்கல் மாவட்டத்துக்கு கட்டட வேலைக்குச் சென்றுவிட்டு, இருசக்கர வாகனத்தில் சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனா்.
தீவட்டிப்பட்டி அருகேயுள்ள மேச்சேரி பிரிவு சாலை பகுதியில் இருசக்கர வாகனம் வந்தபோது, சாலை தடுப்பான் மீது மோதாமல் இருப்பதற்காக தனது வாகனத்தை மணி சற்று திருப்பியுள்ளாா். அப்போது எதிா்பாராதவிதமாக அருகில் சென்று கொண்டிருந்த சரக்கு லாரியின் பின்சக்கரத்தில் இருசக்கர வாகனம் சிக்கி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் மணி உள்பட மூவரும் உடல் நசுங்கி உயிரிழந்தனா். விபத்து குறித்த தகவல் அறிந்த தீவட்டிப்பட்டி காவல் நிலைய ஆய்வாளா் பிரபாவதி, போலீஸாா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டனா். உயிரிழந்த மூவரின் சடலங்களையும் போலீஸாா் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக ஓமலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விபத்து குறித்து தீவட்டிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.