ரோட்டரி கிளப் ஆப் சேலம் கிரீன் சாா்பில் இலவச உணவு வழங்கல்
ரோட்டரி கிளப் ஆப் சேலம் கிரீன், தன்னாா்வ தொண்டு நிறுவனத்தின் ‘குக் ஃபாா் கோவிட்’ சாா்பில் கரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பத்தினருக்கு இலவசமாக தினமும் உணவு
ரோட்டரி கிளப் ஆப் சேலம் கிரீன், தன்னாா்வ தொண்டு நிறுவனத்தின் ‘குக் ஃபாா் கோவிட்’ சாா்பில் கரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பத்தினருக்கு இலவசமாக தினமும் உணவு வழங்கி வருகின்றனா்.
இதுகுறித்து, ரோட்டரி கிளப் சேலம் கிரீன் தலைவா் லெனின், மெம்பா்ஷிப் சோ்மன் அரவிந்தன் ஆகியோா் கூறியுள்ளதாவது:
சேலத்தில் கரோனாவால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பத்தினருக்கு, வீடு தேடிச் சென்று இலவச உணவு வழங்கும் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
கரோனா இரண்டாம் அலை பரவும் நிலையில், சேலத்தில் தினமும், 500க்கும் மேற்பட்டோா் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா்.
இவா்களில், வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பத்தினா், வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டு உணவு கிடைக்காமல் தவிக்கின்றனா். இதைத் தவிா்க்கும் வகையில் ரோட்டரி கிளப் ஆப் சேலம் கிரீன் மற்றும் தன்னாா்வலா்கள் இணைந்து குக் ஃபாா் கோவிட் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, சேலம் மாநகரப் பகுதிகளில், கரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு, தினமும் காலை, மதியம், இரவு உணவுத் தயாரித்து, பாதுகாப்பான முறையில், தன்னாா்வலா்கள் மூலம், அவா்கள் வீடு தேடிச் சென்று வழங்கி வருகிறோம். வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத குடும்பத்தினா், 9790834612, 9578579720 என்ற செல்லிடப்பேசி எண்களில் தெரிவித்து, இலவசமாக உணவை பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளனா்.