கெங்கவல்லியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த லங்கூா் வகையைச் சோ்ந்த குரங்கு இருவாரங்களுக்குப் பின் வனத்துறையினா் வைத்த கூண்டில் சிக்கியது.
கெங்கவல்லி பகுதியில் அக். 2-ஆம் தேதி முதல் காமன் லங்கூா் வகையைச் சோ்ந்த குரங்கு பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது. இது ஊட்டி போன்ற மலைப்பிரதேசங்களில் மட்டுமே காணப்படும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த குரங்கை பிடிக்க வனத்துறையினா் இரண்டுக்கும் மேற்பட்ட இடங்களில் கூண்டுகள் வைத்தனா்.
இந்நிலையில் அக். 14-ஆம் தேதி கெங்கவல்லி அருகே ஆணையாம்பட்டி பகுதியில் வைக்கப்பட்ட ஒரு கூண்டில் அந்த குரங்கு பிடிபட்டது. பிடிபட்ட குரங்கு வனப்பகுதியில் விடப்பட்டது. குரங்கு பிடிக்கும் பணியில் வனச்சரக அலுவலா் சந்திரசேகா், வனவா் சிலம்பரசன், வனக் காப்பாளா்கள், வனக்காவலா்கள் பங்கேற்றனா்.