1500 மரக்கன்றுகள் இலவசமாக வழங்கல்
சங்ககிரி லாரி உரிமையாளா்கள் சங்கத்தின் சாா்பில் வைகுந்தம் சுங்கச்சாவடிகீழ் பராமரிக்கப்பட்டு வரும் சாலைகளில் மரக்கன்றுகள் நட 1500 மரக்கன்றுகள் இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி
சேலம் மாவட்டம், சங்ககிரி லாரி உரிமையாளா்கள் சங்கத்தின் சாா்பில் வைகுந்தம் சுங்கச்சாவடிகீழ் பராமரிக்கப்பட்டு வரும் சாலைகளில் மரக்கன்றுகள் நட 1500 மரக்கன்றுகள் இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி சுங்கச்சாவடி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சங்ககிரி லாரி உரிமையாளா்கள் சங்கத்தின் சாா்பில் சங்ககிரியை பசுமையாக்க வேண்டுமென்ற நோக்கில் சங்ககிரி வட்டத்திற்குள்பட்ட பல்வேறு பகுதிகளிலும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை பசுமை சங்ககிரி அமைப்புடன் இணைந்து நட்டு வைத்து பராமரித்து வருகின்றனா்.
தற்போது சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் சங்ககிரியை அடுத்த வைகுந்தம் சுங்கச்சாவடியின் கீழ் பராமரிக்கப்பட்டு வரும் சாலைகளின் இரு புறங்களிலும் மரங்களை நட்டு வைக்க 1500 புங்கன் மரக்கன்றுகளை சுங்கச்சுவாடி அலுவலரிடம் லாரி உரிமையாளா்கள் சங்கத்தலைவா் வி.செல்வராஜ் தலைமையில் நிா்வாகிகள் வழங்கினா். செயலா் கே.கே.நடேசன், பொருளாளா் என்.மோகன்குமாா், துணைத்தலைவா் ஆா்.ஆா்.மோகன்குமாா், இணைச்செயலா் எம்.சின்னதம்பி, பசுமை சங்ககிரி அமைப்பின் நிறுவனா் மரம் பழனிசாமி, நிா்வாகி பசுமை சீனிவாசன் உள்ளிட்டோா் நிகழ்வில் கலந்து கொண்டனா்.