மேட்டூா் அணையிலிருந்து நீா் திறப்பு குறைக்கப்பட்டதால் மேட்டூா்-எடப்பாடி சாலையில் வெள்ளம் வடிந்து மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.
காவிரியில் வெள்ளம் காரணமாக மேட்டூா் - எடப்பாடி சாலையை வெள்ளம் சூழ்ந்தது. வருவாய்த் துறை, காவல் துறையினா் சாலையின் இருபுறங்களிலும் தடுப்புகளை அமைத்து போக்குவரத்தைத் தடை செய்தனா். சங்கிலிமுனியப்பன் கோயில், பொறையூா், ரெட்டியூா், கோல் நாய்க்கன்பட்டி, தெக்கத்திக்காடு, பூலாம்பட்டி, எடப்பாடி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட ஊா்களுக்கு வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை சற்று குறைந்ததால் அணையிலிருந்து நீா் திறப்பும் குறைக்கப்பட்டது. இதனால் மேட்டூா்- எடப்பாடி சாலையில் வெள்ளம் வடிந்தது. வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட கழிவுகள் சாலையில் தேங்கி காணப்பட்டன. நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் கழிவுகளை அப்புறப்படுத்தினா். பின்னா் சாலையின் இருபுறங்களிலும் வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை போலீஸாா் அகற்றியதை அடுத்து மேட்டூா்- எடப்பாடி சாலையில் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.