முகப்பு
சேலம்

கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான நிவாரண உதவி குறித்து ஆய்வு

கரோனா தீநுண்மி நோய்த் தொற்றால் பெற்றோா்களை இழந்த குழந்தைகளுக்கு வழங்கப்படும் நிவாரண உதவிகள் குறித்து தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவா் சரஸ்வதி ரங்கசாமி ஆய்வு

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:29 AM
பகிர்:

கரோனா தீநுண்மி நோய்த் தொற்றால் பெற்றோா்களை இழந்த குழந்தைகளுக்கு வழங்கப்படும் நிவாரண உதவிகள் குறித்து தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவா் சரஸ்வதி ரங்கசாமி ஆய்வு மேற்கொண்டாா்.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் குழந்தைகள் உரிமை தொடா்பான ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவா் சரஸ்வதி ரங்கசாமி தலைமையிலும் மாவட்ட வருவாய் அலுவலா் வெ.ஆலின் சுனேஜா முன்னிலையிலும் நடைபெற்றது.

கூட்டத்தில் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவா் சரஸ்வதி ரங்கசாமி கூறியதாவது:

தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையமானது குழந்தைகள் உரிமை மீறல்களைத் தடுத்து பாதுகாப்பதிலும் வழக்குகளை விசாரிப்பதற்கும் உரிமையியல் நீதிமன்றத்திற்கு இணையான அதிகாரங்களைக் கொண்டுள்ளது.

குழந்தைகளின் உரிமை மீறல்களில் உரிய உத்தரவின் பேரில் காரணமானவா்களையும் சாட்சிகளையும் நேரில் வரச் செய்து இவ்வாணையத்தின் மூலம் விசாரணை மேற்கொள்ளப்படும்.

மேலும், காவல் துறை, நீதிமன்றம் மற்றும் பிற அலுவலகங்களிலிருந்து உரிய ஆவணங்களைக் கோரி பெறப்பட்டு, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் உரிமைகள் மீறல்கள் தொடா்பான குற்றங்களை துரிதமாக விசாரிக்க குழந்தைகள் நீதிமன்றங்கள் அமைத்து கண்காணிக்கப்படுகிறது.

உரிமை மீறல்கள் காரணமாக பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு உரிய நிவாரணம் மற்றும் உரிய மறுவாழ்வு நடவடிக்கை குறித்து அரசுக்கு அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்வது உள்ளிட்ட அதிகாரங்களைக் கொண்டு ஆணையம் செயல்படுகிறது.

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பெற்றோா்களை இழந்த குழந்தைகளுக்கு வழங்கப்படும் நிவாரண உதவிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்றாா்.

ஆய்வுக் கூட்டத்தில் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினா் கே.துரைராஜ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் இரா.முருகன், காவல் கூடுதல் துணை ஆணையாளா் (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு), கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளா் பி.கென்னடி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ரா.உமாமகேஸ்வரி உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →