சேலத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை ஈரோடு நோக்கி சென்ற தனியார் பேருந்து சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த அக்கமாபேட்டை பகுதியில் செல்லும் போது எதிர்பாரதவிதமாக பள்ளத்தில் இறங்கியதில் ஏற்பட்ட விபத்தில் பேருந்தில் பயணம் செய்த கூலித்தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். 30க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.
சேலம் அயோத்தியாபட்டினம் பகுதியைச் சேர்ந்த வெற்றிவேல் என்பவர் சேலத்திலிருந்து ஈரோடு நோக்கி தனியார் பேருந்தை ஓட்டிச் சென்றுள்ளார். சங்ககிரியை அடுத்த அக்கமாபேட்டை பகுதியில் பேருந்து செல்லும் போது எதிர்பாரதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டினை இழந்து பேருந்து சாலையோரத்தில் உள்ள தென்னை மரத்தில் மோதி பள்ளத்தில் இறங்கி நின்றது.
ஞாயிற்றுக்கிழமை திருமண முகூர்த்த நாள் என்பதால் 40க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. பேருந்து விபத்துக்குள்ளானதும் அப்பகுதியில் இருந்த இளைஞர்கள், ஊர்பொதுமக்கள் காவல்துறை, தீயணைப்புத்துறை, ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அவ்வழியே வந்த வாகனங்கள் உதவியுடன் அனுப்பி வைத்தனர்.
பேருந்தினை கிரேன் மூலம் மீட்கும் காவல்துறையினர்.
அதில் சங்ககிரி, பழைய எடப்பாடி சாலை பகுதியைச் சேர்ந்த திருமணத்திற்கு மேளம் வாசிப்பவர் கணேசன் (65) பலத்த காயமடைந்ததில் உயிரிழந்தார். மேலும் பலத்த காயமடைந்த பலர் சேலம், ஈரோடு, திருச்செங்கோடு, கோவை உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இரு கிரேன்கள் மூலம் விபத்துக்குள்ளான தனியார் பேருந்தினை மீட்டு போலீஸார் அப்புறப்படுத்தினர்.
விபத்துக்குள்ளான பேருந்தில் காயமடைந்தவர்களை சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் மக்கள்.
இதுகுறித்து சங்ககிரி காவல் ஆய்வாளர் ஆர்.தேவி விசாரணை செய்து வருகிறார். சம்பவ இடத்தினை சங்ககிரி உள்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பி.ஆரோக்கியராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சங்ககிரி துணை வட்டாட்சியர்கள் ராஜேந்திரன், ஜெயக்குமார், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் மீட்பு பணிகளை செய்து வருகின்றனர்.
 
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.