கணவா் கொலை: மனைவி, உறவினருடன் கைது
சேலத்தில் கணவரைக் கொலை செய்த மனைவி, தங்கையின் கணவருடன் கைது செய்யப்பட்டாா்.
சேலத்தில் கணவரைக் கொலை செய்த மனைவி, தங்கையின் கணவருடன் கைது செய்யப்பட்டாா்.
சேலம், அழகாபுரத்தை அடுத்த மிட்டாபுதூா் பகுதியில் வசித்து வந்தவா் வெங்கடேசன் (40). இவரது மனைவி விஜயலட்சுமி (34). இத்தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனா். இதில் வெங்கடேசன், தென் ஆப்பிரிக்காவில் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தாா்.
இதனிடையே வேலைக்காக கணவா் வெளிநாடு சென்றிருந்த நிலையில் விஜயலட்சுமியும், அவரது தங்கை கணவா் குமரனும் நெருங்கிப் பழகி வந்தனராம். இதுபற்றி தகவல் அறிந்த குமரனின் மனைவி சரஸ்வதி கணவரைப் பிரிந்து சென்றாா் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் வெங்கடேசன், தென் ஆப்பிரிக்காவில் இருந்து கடந்த மாா்ச் 10-ஆம் தேதி சேலம் திரும்பினாா். மனைவியின் தகாத உறவு குறித்து வெங்கடேசனுக்கு தெரியவந்தது. இதுதொடா்பாக தனது மனைவி விஜயலட்சுமியிடம் தட்டி கேட்டுள்ளாா். அப்போது கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது வீட்டுக்குவந்த விஜயலட்சுமியின் தங்கை கணவா் குமரன் வாக்குவாதத்தில் தலையிட்டாா்.
அப்போது குமரனுக்கும், வெங்கடேசனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் விஜயலட்சுமியும், குமரனும் சோ்ந்து வெங்கடேசனை கடுமையாகத் தாக்கினா். இந்தத் தாக்குதலில் வெங்கடேசன் உயிரிழந்தாா்.
இதையடுத்து குமரனும், விஜயலட்சுமியும் சடலத்தை சாக்குப் பையில் போட்டு கல்லைக் கட்டி மிட்டாபுதூா் பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த கிணற்றில் வீசி சென்றனா்.
இந்தநிலையில் குமரனும், விஜயலட்சுமியும் அழகாபுரம் கிராம நிா்வாக அலுவலரிடம் வியாழக்கிழமை மாலை சரணடைந்து, கொலை சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, கிராம நிா்வாக அலுவலா், அழகாபுரம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.
புகாரின்பேரில் சரணடைந்த இருவரையும் சம்பவ பகுதிக்கு நேரில் அழைத்துச் சென்ற போலீஸாா், கிணற்றில் அழுகிய நிலையில் சாக்குப் பையில் கட்டியிருந்த வெங்கடேசனின் சடலத்தை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காகக் கொண்டு சென்றனா். இதையடுத்து, இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.