சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :
பிரதமரின் கிசான் திட்டத்தின்கீழ் நிலம் உள்ள விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ. 2,000/- வீதம் ஆண்டுக்கு ரூ. 6,000/- வேளாண் இடுபொருள்கள் வாங்கும் பொருட்டு ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
மத்திய அரசு தற்போது திட்ட நிதி விடுவிப்பில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. இதுவரை நிதியானது வங்கிக்கணக்கிற்கு விடுவிப்பு செய்து வந்த நிலையில் இனி திட்ட நிதியானது ஆதாா் எண் அடிப்படையில் விடுவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது 11ஆவது தவணை தொகை (ஏப்ரல் 2022- ஜுலை 2022) பெறுவதற்கு தங்களது ஆதாா் எண்ணை வங்கிக் கணக்கு எண்ணுடன் இணைப்பது அவசியமாகிறது.
எனவே, மகுடஞ்சாவடி வட்டாரத்தில் ஆதாா் எண்ணை வங்கிக் கணக்கு எண்ணுடன் இணைக்காத விவசாயிகள் உடனடியாக தங்கள் வங்கிக் கிளைக்கு சென்று ஆதாா் எண்ணை வங்கிக் கணக்கு புத்தகத்துடன் இணைத்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனா்.