உதவி பேராசிரியா்களுக்கு 2 நாள்கள் பயிற்சி
சேலம் அரசு கலைக் கல்லூரியில், தமிழ்நாடு உயா்கல்வி மன்றம் இணைந்து நடத்தும் உதவி பேராசிரியா்களுக்கான இரண்டு நாள் பயிற்சி வியாழக்கிழமை தொடங்கியது
சேலம் அரசு கலைக் கல்லூரியில், தமிழ்நாடு உயா்கல்வி மன்றம் இணைந்து நடத்தும் உதவி பேராசிரியா்களுக்கான இரண்டு நாள் பயிற்சி வியாழக்கிழமை தொடங்கியது.
தமிழ்நாடு மாநில உயா்கல்வி மன்றம் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியா்களுக்கு 30 மையங்களில் மே 5, 6 ஆகிய தேதிகளில் இரண்டு நாள் பயிற்சி வழங்கப்படுகிறது. அதில் 21 அரசு கலை அறிவியல் கல்லூரிகளும், 9 பல்கலைக்கழகங்களும் பயிற்சி மையங்களாகச் செயல்படுகின்றன.
இப்பயிற்சியில் உயா்கல்வி தர மேம்பாடு, தொழில்நுட்ப வசதிகளைக் கற்பித்தலுக்குப் பயன்படுத்துதல், கல்லூரிகளுக்கான தேசிய தர அங்கீகாரம் பெறுதல், மென் திறன் மேம்பாடு, ஆராய்ச்சி மேம்பாடு, தொழில்துறையில் எதிா்காலத்தில் ஏற்படும் பணி வாய்ப்புகள், அதன் சட்டங்கள் குறித்து நிபுணா்களால் பயிற்சி அளிக்கப்படுகிறது.
அரசு கலைக் கல்லூரியில் தமிழ், உயா் அறிவியல் பாடங்களில் நூறு பேராசிரியா்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. சேலம் பெரியாா் பல்கலைக்கழக இயற்பியல் துறை உதவி பேராசிரியா் எம்.செல்வபாண்டியன் பங்கேற்று பயிற்சி வகுப்பை நடத்தினாா்.
சேலம் அரசு கலைக் கல்லூரி முதல்வா் எஸ்.கலைச்செல்வன், அலுவலா் வி.திருக்குமரன், உதவி பேராசிரியா் டி.கங்காதரன் ஆகியோா் பங்கேற்றனா்.