சுற்றுலாப் பயணிகளை வரவேற்க ஏற்காட்டில் பூத்துக்குலுங்க தொடங்கியிருக்கும் மலர்கள்
சேலம் மாவட்டம் ஏற்காடு என்பது தமிழகத்தில் சுற்றுலா தலங்களில் உள்ள முக்கியமான ஒன்றாகும் இங்கு ஏப்ரல் மாத இறுதியில் கோடை விழா மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம்.
சேலம்: சேலம் மாவட்டம் ஏற்காடு என்பது தமிழகத்தில் சுற்றுலா தலங்களில் உள்ள முக்கியமான ஒன்றாகும் இங்கு ஏப்ரல் மாத இறுதியில் கோடை விழா மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம்.
அப்போது தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா, உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா தொற்று காரணமாக கோடை விழா நடத்தப்படவில்லை. இந்த நிலையில் தமிழகத்தில் நடப்பாண்டு தொற்று சதவீதம் குறைந்து வரும் சூழ்நிலையில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் அடிப்படையில் தோட்டக்கலைத் துறையினர் இரண்டு மாதங்களுக்கு முன்பே அண்ணா தாவரவியல் பூங்கா, ரோஸ் கார்டன் ஆகிய இடங்களில் 40 வகை மலர்களுக்கான 2 லட்சம் விதைகள் தயார் செய்யப்பட்டு அவை நடப்பட்டு தற்போது பராமரிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது
Advertisement
Advertisement
இதில் பால்சம், ஜினியா, கல்வியா, திரைசாந்தியும், ஜெரேனியம், ஃபேன்சி மேரி, கோல்ட் ஹாட்ஸ்டார், ஸ்கை லாட் போன்ற பல்வேறு வகையான மலர்கள் இங்கு வளர்க்கப்பட்டு வருகிறது. இதுதவிர வெளிமாநில இருந்து வரவழைக்கப்பட்ட நான்காயிரம் செடிகள் பதியம் போடப்பட்டு தற்போது மலர்கள் பூத்துக் குலுங்க தொடங்கியுள்ளது.
அண்ணா பூங்கா நிர்வாகம் சார்பில் அந்தந்த தொட்டிகளில் உள்ள பூச்செடிகளை பொதுமக்களின் பார்வைக்காக வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது ஏற்காடு வந்து செல்லும் பயணிகள் அந்த பூச்செடிகளை ரசித்து பார்த்து செல்கின்றனர். அண்ணா பூங்காவில் மலர் கண்காட்சி நடக்க உள்ள திடல், கண்ணாடி மாளிகை ஆகிய இடங்களை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. செடிகளில் மலர்கள் பூத்துக் குலுங்குவதால் மாவட்ட நிர்வாகம் மலர்கண்காட்சிக்கான தேதியை அறிவிக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்
மொத்தத்தில் ஏற்காடு வரும் சுற்றுலாப் பயணிகளை வரவேற்பதற்காக ஆயிரக்கணக்கான மலர்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எப்போதும் இல்லாத அளவில் இந்த முறை கோடை விழா களை கட்டத் தொடங்கும் என்பதால் கூடுதல் நாள்களை கொண்டு கோடை விழா சிறப்பாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது