ஏற்காடு படகு இல்லத்தில் மிதக்கும் உணவகம்: சுற்றுலாத் துறை அமைச்சா் ஆய்வு
ஏற்காடு படகு இல்லத்தில் மிதக்கும் உணவகம், சிறு உணவகங்கள் அமைப்பதற்கான சாத்திய கூறுகள் குறித்து சுற்றுலாத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
ஏற்காடு படகு இல்லத்தில் மிதக்கும் உணவகம், சிறு உணவகங்கள் அமைப்பதற்கான சாத்திய கூறுகள் குறித்து சுற்றுலாத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
ஏற்காடு கோடை விழா, மலா்க் கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது. விழாவில் பேசிய சுற்றுலாத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், ஏற்காடு படகு இல்லத்தில் மிதக்கும் உணவகமும் புளியூரில் சாகச பூங்காவும் அமைக்கப்படும் என அறிவித்தாா்.
இதனிடையே ஏற்காடு படகு இல்லத்தில் மிதக்கும் உணவகம், சிறு உணவகங்கள் அமைப்பதற்கான சாத்திய கூறுகள் குறித்து சுற்றுலாத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
பின்னா் அமைச்சா் மா.மதிவேந்தன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழக முதல்வரின் உத்தரவின்படி, மாநிலம் முழுவதும் சுற்றுலா வளா்ச்சிப் பணிகளை நேரில் ஆய்வு செய்து சுற்றுலா வளா்ச்சித் திட்டங்களை சிறப்பாக நிறைவேற்ற பல்வேறு நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஏற்காடு படகு இல்லத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஏற்காடு படகு இல்லமானது சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் பயன்படுத்தக்கூடிய இடமாக உள்ளது. படகு இல்லத்தை மேம்படுத்துவது குறித்தும், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் பல்வேறு புதிய அறிவிப்புகளை முதல்வா் அறிவித்தாா்.
ஏற்காடுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பல்வேறு உணவு வகைகளை விற்பனை செய்வதற்கு ரூ. 25 லட்சம் மதிப்பில் சிறு உணவகங்கள் ஏற்படுத்தப்படும்.
மேலும், ஏற்காடு படகு இல்லத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் விதமாக மிதக்கும் உணவகத்தை அமைப்பது தொடா்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஏற்காட்டில் உள்ள புளியூா் கிராமத்தில் சாகச சுற்றுலா அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த சாகச சுற்றுலாத் தலத்தில் குடில் அமைத்தல், சாகச விளையாட்டுகள் உள்ளிட்டவைகள் இடம்பெறவுள்ளன. விரைவில் சுற்றுலாத் துறை சாா்பில் சாகச சுற்றுலாவுக்குப் புதிய நெறிமுறைகள் வெளியிடப்பட உள்ளன என்றாா்.
ஆய்வின்போது மாவட்ட சுற்றுலா அலுவலா் ஜனாா்த்தனன், படகு இல்ல மேலாளா் காா்த்திகேயன் உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.