அமெரிக்கா: சட்டவிரோதமாகக் குடியேறியவர்களுக்கு இலவச விமான டிக்கெட், ரூ. 2.40 லட்சம் ரொக்கம்!
அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் தாமாக வெளியேறினால், இலவச விமான டிக்கெட், 2600 டாலர் ரொக்கமும் தருவதாக டிரம்ப் அரசு அறிவிப்பு
அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் தாமாக வெளியேறினால், விமான டிக்கெட் இலவசமாக வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை நாடுகடத்தும் நடவடிக்கையில் அந்நாட்டு அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மேலும், சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் தாமாக முன்வந்து வெளியேறினால், சலுகைகளையும் அரசு அறிவித்து வருகிறது.
இதன்படி, அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்கள் மற்றும் சீனர்கள் தாமாக முன்வந்து வெளியேறினால், விமான டிக்கெட் இலவசமாக வழங்கப்படுவதுடன், 2,600 அமெரிக்க டாலரும் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 2.42 லட்சம்) வழங்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
முன்னதாக, இந்த சலுகைத் தொகை 1000 அமெரிக்க டாலராக இருந்த நிலையில், தற்போது 2,600 டாலராக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம், நாட்டைவிட்டு வெளியேறும் ஒருவருக்கு அமெரிக்க அரசால் 5,000 டாலர் வரையில் செலவழிக்கப்படும்.
இருப்பினும், சட்டவிரோதமாகக் குடியேறிய ஒருவரை அமெரிக்க அதிகாரிகள் பிடித்து வெளியேற்றினால், 18,000 டாலர் வரையில் செலவாகும் என்பதால், தற்போதைய அறிவிப்பின்படி அமெரிக்க அரசுக்கு 13,000 டாலர் மிச்சமே.