FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஏர் இந்தியா விமான விபத்து முதலாண்டு நினைவு நாள்! பாதிக்கப்பட்டோர் நிலை என்ன?

ஏர் இந்தியா விமான விபத்தின் முதல் நினைவுநாளில் பாதிக்கப்பட்டவர்கள் எப்படியிருக்கிறார்கள் என்பது பற்றி..

Updated On : 12 ஜூன் 2026, 11:43 am IST
ஏர் இந்தியா விமான விபத்து - கோப்புப்படம்.
பகிர்:

குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையம் அருகே ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதன் முதல் நினைவு நாள் இன்று கனத்த இதயங்களுடன் கடைப்பிடிக்கப்படுகிறது.

260 பேரை பலி கொண்ட விமான விபத்தில், 241 பேர் விமானத்தில் இருந்தவர்கள், 19 பேர் மருத்துவக் கல்லூரி விடுதியில் இருந்தவர்கள்.

விபத்து நடந்த இடத்தில், அஞ்சலி செலுத்த, விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினர் பலரும் அகமதாபாத் வந்துள்ளனர்.

Advertisement

Advertisement

சம்பவ இடம் இன்னமும் அப்படியே இருக்கிறது. விமானம் பற்றி எரிந்ததற்கான தடயமும், கட்டட இடிபாடுகளும் சாட்சியாக உள்ளன. பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களும் அதிலிருந்து மீளாமல் பழைய நினைவுகளோடு அங்கே வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

உயிர் பிழைத்தவர் எப்படி இருக்கிறார்?

ஏர் இந்தியா விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினர், அவர்களின் நினைவில் வாட, தப்பிப் பிழைத்த ஒரே ஒருவர் விஷ்வாஸ் குமார் ரமேஷ், தன்னுடைய வாழ்வே மிகப்பெரிய துயரத்தில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மற்றவர்கள் பார்வைக்கு நான் உயிர் பிழைத்தவராகத் தெரிகிறேன், ஆனால், நாள்தோறும் கதவுகளுக்குப் பின்னால் அனுபவிக்கும் வேதனை யாருக்கும் தெரியாது, என்னால் நிம்மதியாக உறங்க முடியவில்லை, திடீர் திடீரென அதிர்ச்சி அடைகிறேன், மனநிலை சீராக இருப்பதில்லை, நினைவுத்திறன் பாதிக்கப்படுகிறது. நான் அனுபவிக்கும் துயரங்களை வார்த்தைகளால் விவரிக்க இயலாது என்கிறார்.

உடலில் பட்ட காயங்கள் ஆறிவிட்டன. ஆனால், விமான விபத்தினால் உணர்வுப்பூர்வமாக ஏற்பட்ட பாதிப்புகள் மோசமடைகின்றன என்றும் கூறியிருக்கிறார்.

விபத்து நிகழ்ந்து ஓராண்டுக்குப் பிறகும், விமானம் விழுந்த மருத்துவ மாணவர்கள் விடுதிப் பகுதி, அந்த கோர முகத்துடனே காட்சியளிக்கிறது. தங்களுடன் இருந்தவர்கள், திடீரென ஒரு சில வினாடிகளில் இல்லாமல் போன அந்த இடத்தில் ஒரு ஆழ்ந்த மௌனம் நீடிக்கிறது.

விமான விபத்தின்போது, தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்களும் இன்று தங்களது நினைவஞ்சலியை செலுத்தியிருக்கிறார்கள். சம்பவத்தின்போது, அந்த இடமே கட்டட மற்றும் விமான இடிபாடுகளால் நிரம்பியிருந்தது. மிகக் கருப்பாக புகையும், ஒரு பக்கம் விமானப் பாகங்கள் கொழுந்து விட்டு எரியும்போது, அதற்குள் மனிதர்கள் இருக்கார்கள் என்பதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.

எப்போது வேண்டுமானாலும் சம்பவ இடத்தில் எதுவேண்டுமானாலும் வெடிக்கலாம், தீப்பற்றி எரியலாம் என்ற நிலையில், உயிருடன் யாராவது இருக்கிறார்களா என்பதைத் தேடினோம். அங்கிருந்த மக்களும் உதவினார்கள். இதனால்தான், காயமடைந்த 28 பேர் விரைவாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர் என்கிறார்கள்.

வானத்தை நிமிர்ந்து பார்ப்பதேயில்லை

பாழடைந்த சுவர்களைக் கொண்ட ஒரு சின்ன அறைக்குள் வாழும் பிரகலோத் தாகூர், விமானம் விழுந்த இடத்தில் இருந்த தன்னுடைய மனைவி சரளாபென் மற்றும் பேத்தி ஆத்யாவை இழந்து வாடுகிறார்.

மருத்துவ மாணவர் விடுதிக்கு அருகே இருந்த என் மனைவியும், பேத்தியும் விபத்தில் இறந்துவிட்டார்கள். ஓராண்டு ஆகிறது, இப்போது எங்கள் வீட்டின் மீது விமானம் பறந்தாலும், எனக்கு அவர்கள் நினைவுதான் வருகிறது. இந்த விபத்துக்குப் பிறகு நான் வானத்தை நிமிர்ந்து பார்ப்பதேயில்லை என்கிறார் அழுதபடி.

மருத்துவ மாணவர் விடுதியில் தங்கியிருப்பவர்களுக்கு உணவு கொடுக்கும் வேலை செய்து வந்தோம். மருத்துவர்களுக்கு உணவு கொடுத்துக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது. எப்போதுமே அவரது பாட்டியுடன்தான் ஆத்யா இருப்பார். விபத்து நேரிட்டபோது 6 நாள்கள் மருத்துவமனை, முகாம் என பல இடங்களில் தேடினோம். இறுதியாக பிணவறையிலிருந்துதான் உடல்களைக் கண்டுபிடித்தோம்.

ஏதோ மோசமாக நடந்திருக்கிறது

சம்பவத்தின்போது, என் மகனின் நண்பர் எனக்கு போன் செய்து, உங்கள் மகன், மருமகள் சென்ற விமானத்தின் விவரங்கள் தெரியுமா என்று லண்டனிலிருந்து கேட்டார். அப்போதே, ஏதோ மோசமாக நடந்திருக்கிறது என்று அவரது குரலில் எனக்குத் தெரிந்தது என்கிறார் சவ்தாம்பாய் சௌத்ரி என்ற முதியவர்.

புதிதாகத் திருமணமான எனது மகனையும், மருமகளையும் அகமதாபாத் விமான நிலையத்தில், லண்டன் செல்ல விமானத்தில் வழியனுப்பிவிட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தபோதே, இந்த அழைப்பு வந்துவிட்டது. ஏதோ மோசமாக நடந்திருக்கலாம் என மனதுக்குள் சொன்னது. பிறகுதான் தெரியும், அந்த விமானம் விபத்துக்குள்ளானது பற்றி.

அப்போதுதான் திருமணமாகியிருந்தது. மிகப் பிரமாண்டமாக திருமணம் நடந்திருந்தது. இரண்டு மகன்கள்தான் எங்களுக்கு. மருமகளாக மகள் வந்ததைக் கொண்டாடிக் கொண்டிருந்தபோதே மகனும் மகளும் எங்களை விட்டுச் சென்றுவிட்டனர் என கூறும்போதே கண்களில் கண்ணீர் வடிகிறது.

காவல்துறைக்கு சவால்

மிகப்பெரிய விபத்து, நடந்தது என்ன என்பதை யூகிப்பதற்குள் பல பணிகள் தொடங்கிவிட்டன. ஒரு பக்கம் ரத்த மாதிரிகளை சேகரிக்க வேண்டும், உடல்களை அடையாளம் காணும் பணி என மூச்சடைத்துப் போனது. விமான விபத்தில் பலியானவர்களில் முதல் உடலை அடையாளம் காண்டு உறவினர்களிடம் ஒப்படைத்தது ஜூன் 13ஆம் தேதி காலை 8.30. விபத்து நிகழ்ந்து 20 மணி நேரத்துக்குள்.

ஒரு சிறிய சாலை விபத்தில்கூட, உடலை ஒப்படைக்க 24 மணி நேரத்தக்கு மேல் ஆகும். ஆனால், சொல்லொணாத் துயரில் இருக்கும் உறவினர்களை மேலும் கஷ்டப்பட விடக் கூடது என மிக விரைவாகப் பணிகளை செய்தோம். டிஎன்ஏ மூலம் முதல் நபரை அடையாளம் கண்டது ஜூன் 14ஆம் தேதி மாலை 3.19 மணி. விபத்து நிகழ்ந்து 50 மணி நேரத்துக்குள் என்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments