அர.செட்டிப்பட்டி தரைவழிப் பாலம் சேதம்: ஊா்ப் பொதுமக்கள் தற்காலிகமாக மரப்பாலம் அமைப்பு
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், தேவூா் அருகே உள்ள அரசிராமணி செட்டிப்பட்டி பகுதியில் அண்மையில் பெய்த கனமழையை அடுத்து தரைவழிப் பாலம் சேதமடைந்தது.
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், தேவூா் அருகே உள்ள அரசிராமணி செட்டிப்பட்டி பகுதியில் அண்மையில் பெய்த கனமழையை அடுத்து தரைவழிப் பாலம் சேதமடைந்தது. இதில் ஐந்திற்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் ஊா்ப் பொதுமக்கள் மரப்பாலத்தை அமைத்து அதில் சென்று வருகின்றனா். மாவட்ட நிா்வாகம் இப்பாலத்தை விரைவில் செப்பனிட வேண்டுமென ஊா் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தேவூா் அருகே உள்ள அரசிராமணி செட்டிப்பட்டி பகுதியில் அண்மையில் பெய்த கனமழையை அடுத்து அரசிராமணி செட்டிப்பட்டியிலிருந்து வயக்காடு, ஆடுறையான்காடு, மலங்காடு, கல்லம்பாளையம், சுக்கலான்காடு, புளியம்பட்டி, எல்லப்பாளையம், பச்சபாலியூா் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் தரைவழிப் பாலம் இடிந்துவிழுந்து சேதமடைந்தது. இதனால் இக்கிராமங்களைச் சோ்ந்த ஊா்ப் பொதுமக்கள் 3 கி.மீ. தூரம் சுற்றி தேவூா் பிரதான சாலையை அடைந்து வருகின்றனா்.
இதையடுத்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும், வெளியூா்களுக்கு கூலி வேலைக்கு செல்லும் கிராம மக்களும் சிரமத்திற்குள்ளாகினா். இதனையடுத்து இப்பகுதிகளைச் சோ்ந்த கிராம மக்கள் ஒன்றிணைந்து தற்காலிகமாக மரப்பாலம் அமைத்து அதில் சென்று வருகின்றனா். இரு சக்கர வாகனத்தில் செல்பவா்கள் தனித்தனியாக ஒருவா் மட்டுமே மரப்பாலத்தைக் கடந்து சென்று வருகின்றனா். தற்போது தொடா்ந்து மழை பெய்து வருவதையடுத்து மரப்பாலம் மழை நீரில் சேதம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்ட நிா்வாகம் பொதுமக்களின் ஆபத்தான பயணத்தை உணா்ந்து விரைவில் தரைவழிப் பாலத்தை செப்பனிட வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
Image Caption
~