சேலத்தில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக முழுவதும் அரசு கட்டுப்பாட்டில் கேபிள் டிவி செயல்பட்டு வருகிறது. அரசு கேபிள் டிவி தவிர பல்வேறு தனியார் நிறுவனங்களும் கேபிள் சேவையை வழங்கி வருகிறது. இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக சேலம் மாவட்டத்தில் அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு பாதிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த பிரச்னை இருப்பதாக நிர்வாகத்தின் சார்பில் சொல்லப்பட்டாலும் அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் இதனால் கொந்தளிப்படைந்துள்ளனர். கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக பொதுமக்கள் தங்களை தொந்தரவு செய்வதாகவும் இதனால் தனியார் நிறுவனத்தின் சேவையை பயன்படுத்த பொதுமக்கள் தயாராகி வருவதாகவும் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நூற்றுக்கு மேற்பட்ட கேபிள் டிவி ஆபரேட்டர்கள் வந்தனர். மாவட்ட கேபிள் டிவி வட்டாட்சியரை நேரில் சந்தித்த அவர்கள் தற்போதுள்ள பிரச்னையை சரி செய்து கொடுக்குமாறு மனு கொடுத்தனர். ஆனால் தமிழகம் முழுவதும் இந்த தொழில்நுட்ப கோளாறு உள்ளதால் சரி செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்ததால் அதிருப்தி அடைந்த கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒன்றுகூடி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேச்சுவார்த்தைக்கு வந்த வட்டாச்சியரை கேபிள் டிவி ஆபரேட்டர்கள் முற்றுகையிட்டு சிறைப்பிடித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
இது குறித்து கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கூறும் போது, கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக கேபிள் டிவி ஒளிபரப்பு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தொழில்நுட்ப கோளாறு என்று சொல்லப்பட்டாலும் தனியார் நிறுவனங்களுக்கு கேபிள் டிவி இணைப்புகளை மாற்ற நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பொதுமக்கள் தனியார் சேவைக்கு செல்ல வாய்ப்புள்ளது, எனவே அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தமிழக அரசு உடனடியாக கேபிள் டிவி ஒளிபரப்பை சரி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். கேபிள் டிவி ஆபரேட்டர்களின் போராட்டம் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது