வாங்கிய பொருளுக்கு பணம் கேட்ட முன்னாள் ராணுவ வீரர்: இருவர் தாக்குதல்
மேட்டூரில் கடையில் வாங்கிய பொருளுக்கு பணம் கேட்ட முன்னாள் ராணுவ வீரர் மீது இருவர் சரமாரியாகத் தாக்குதல் நடத்திய விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
மேட்டூரில் கடையில் வாங்கிய பொருளுக்கு பணம் கேட்ட முன்னாள் ராணுவ வீரர் மீது இருவர் சரமாரியாகத் தாக்குதல் நடத்திய விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
சேலம் மாவட்டம் மேட்டூர் மாதையன் குட்டையைச் சேர்ந்தவர் செல்வம் (60). முன்னாள் ராணுவ வீரர். இவர் மாதையன் குட்டை பேருந்து நிறுத்தத்தில் ஆவின் டீக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். நேற்று (சனிக்கிழமை) இரவு இவரது கடைக்கு வந்த மாதையன் குட்டையைச் சேர்ந்த இருவர் டீக்கடையில் தின்பண்டங்களை வாங்கி தின்றுவிட்டு அதற்கு உண்டான பணத்தை கொடுக்காமல் செல்ல முயன்றுள்ளனர்.
வாங்கிய பொருளுக்கு செல்வம் பணம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் செல்வத்தை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதுதொடர்பாக மேட்டூர் காவல் நிலையத்தில் குமார் புகார் அளித்துள்ளார்.
மேட்டூர் காவல் துறையினர் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே முன்னாள் ராணுவ வீரரை சரமாரியாக தாக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
மேட்டூர் பவானி சாலையில் பேருந்து நிறுத்தத்தில் உள்ள கடையில் நடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி பதிவுகளை வைத்து காவல் துறையினர் ராணுவ வீரரைத் தாக்கியவர்களை தேடி வருகிறார்கள்.