உங்கள் சிறுநீரகம் நலமா? உறுதி செய்யும் சில கேள்விகள்!
உங்கள் சிறுநீரகம் நலமாக இருக்கிறதா என்பதை உறுதி செய்யும் சில கேள்விகள் பற்றி..
ஒருவரது உடல்நலனில் இதயம்தான் முக்கியம் என்று கருதுகிறோம். ஆனால், சிறுநீரகம் முதல் கல்லீரல் வரை ஒவ்வொரு சின்ன சின்ன உறுப்புகளுமே, உடல் நலனில் முக்கியத்துவம் பெறுகின்றன.
பெரும்பாலானோருக்கு சிறுநீரகம் நன்றாக இருக்கிறதா? இல்லையா என்பதை உறுதி செய்வதிலேயே மிகப்பெரிய சிக்கல் ஏற்படலாம்.
மேலும், சிறுநீரகப் பிரச்னைகள் முதற்கட்டத்திலேயே தெரிவதில்லை. நிலைமை மோசமடைந்த பிறகுதான் அறிய முடிகிறது. ஆனால், சில அறிகுறிகளை ஆரம்பகட்டத்தில் காட்டும் என்றும் அதனை அறிந்து கொண்டு முன்னெச்சரிக்கையோடு செயல்பட்டால் சிறுநீரகத்தை நலமாக வைத்துக் கொள்ளலாம் என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
Advertisement
Advertisement
உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையானவை. இதயம் துடித்துக் கொண்டே நமக்கு அதன் இருப்பைக் காட்டிக்கொண்டிருக்கும். வயிறோ நேரத்துக்கு மணி அடித்து, அதன் வேலையை செய்துவிடும். ஆனால் சிறுநீரகமோ சப்தமே இல்லாமல் 24 மணி நேரமும் அதன் வேலையை செய்து கொண்டிருக்கும்.
கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 200 லிட்டர் ரத்தத்தை சுத்திகரிப்பு செய்து சுழற்சியில் விடுகிறது. ஆனால், அது வைலயை மெல்ல நிறுத்தும்போது ஆரம்பத்தில் தெரிந்து கொள்ளாவிட்டால், நிலைமை மோசமடையலாம்.
சரி, சிறுநீரகத்தின் மொழியை அறிந்து கொண்டால் முன்கூட்டியே நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரலாம்.
அதாவது, ஒரு சிறுநீரகம், எந்த அறிகுறியும் இல்லாமலேயே 40 சதவீத வேலையை நிறுத்திவிடும் என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். எனவே, அது வேலையை நிறுத்தத் தொடங்கும்முன் செய்யும் அறிகுறிகளை அறிந்து கொள்வதுதான் நல்லது.
சிலரோ, சிறுநீரகம் சொல்லும் அறிகுறிகளை அலட்சியப்படுத்திவிட்டு, வயதாகிறது, சத்துக் குறைவு என சப்பைக் கட்டுகளை கட்டினால் ஒருநாள் சிறுநீரகம் முழுதும் வேலையை நிறுத்திவிடலாம்.
எனவே, இந்தக் கேள்விகளுக்கு பதிலளித்து சிறுநீரகம் நலமா என்பதை உறுதி செய்துகொள்ளலாம்.
1. இரவில் வழக்கத்தை விட அதிக முறை சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு.
2. சிறுநீர் நுரையுடன் வருவது.
3. சிறுநீரின் நிறத்தில் மாற்றம் ஏற்படுவது போன்றவை அறிகுறிகளாக இருக்கலாம்.
பொதுவாக நுரையுடன் சிறுநீர் வருவத புரதம் அதிகம் கலந்திருப்பதைக் காட்டுகிறது என்று அர்த்தம்.
ஆரோக்கியமான சிறுநீரகங்கள் புரதத்தை வடிகட்டி ரத்தத்தில் சேர்த்துவிடும். சிறுநீரக வடிப்பான்கள் செயலிழக்கும்போது அதன் வழியே புரதம் வெளியேறி சிறுநீரில் கலந்து விடுகிறது என்பதை அறிய வேண்டும்.
காலையில் எழுந்ததும் கண்களுக்குக் கீழே அல்லது கால் முட்டிகளில் வீக்கம் ஏற்பட்டால் கவனம் செலுத்த வேண்டும். உடலில் இருக்கும் அதிகப்படியான நீரை மற்றும் சோடியத்தை சிறுநீரகம் வெளியேற்றுவதில்லை என்பதையே இது காட்டுகிறது.
சிலர் அதிக நேரம் நிற்பதால் இப்படி நேரிடுகிறது என்று நினைத்துக் கொள்வார்கள். ஆனால், தூங்கி எழுந்ததும் இப்படி ஆகிறது என்றால் அது சிறுநீரகத்தைக் கவனிக்க வேண்டிய நேரம் என்பதைத்தான் காட்டுகிறது என அர்த்தமாம்.
இதையெல்லாம் விட, மக்கள் எப்போதும் ரத்த அழுத்தத்தை கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். சிறுநீரகம்தான் ரத்த அழுத்தத்தை சீராக வைக்கிறது. சிறுநீரகம் அதிக அழுத்தத்துக்கு உள்ளாகும்போது ரத்த அழுத்தம் அதிகரிக்கும். அதனை சீராக்க சிறுநீரகம் அதிகம் வேலை செய்யும்போது அதன் செயல்பாடு பாதிக்கப்படுகிறது.
நமது நாட்டில் 65 சதவீத சிறுநீரக பிரச்னைகள், வாழ்முறை மாற்றங்களால்தான் நேரிடுகின்றனவாம்.
உடல் பருமன் மற்றும் வயிறுப் பகுதியைச் சுற்றியிருக்கும் கொழுப்பு, சிறுநீரகத்தின் செயல்பாடுகளைப் பாதிக்கும் காரணிகளாக உள்ளனவாம். எனவே, சிறுநீரகத்தைக் காக்க உடல் பருமனைக் குறைக்க வேண்டும். ரத்த அழுத்தத்தை அவ்வப்போது பரிசோதிப்பது போன்றவையும் அவசியம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
Here are some questions to check if your kidneys are healthy.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.