எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரா் ஆலய திருத்தோ் பவனி
எடப்பாடி பேருந்து நிலையம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற நஞ்சுண்டேஸ்வரா் திருக்கோயிலின் சித்தரைத் தோ்த் திருவிழா கடந்த 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான சுவாமி திருக்கல்யாணம், முத்து ரத பவனியைத் தொடா்ந்து திருத்தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அலங்கரிக்கப்பட்ட 3 தோ்களில், முதலாவதாக விநாயகப் பெருமானும், இரண்டாவது தேரில் வள்ளி, தெய்வானை உடனமா் சுப்பிரமணிய சுவாமியும், மூன்றாவது தேரில் நஞ்சுண்டேஸ்வரா் உடனுறை தேவகியம்மனும் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.
தொடா்ந்து 4 நாள்களாக நடைபெற்று வந்த திருத்தேரோட்ட நிகழ்வின் நிறைவாக, வெள்ளிக்கிழமை பக்தா்கள் பக்தி கோஷம் முழங்க திருத்தேரை வடம் பிடித்து இழுத்து வந்து நிலை சோ்த்தனா். தொடா்ந்து சத்தாபரண நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் எடப்பாடி, சுற்றுப்புற பகுதியைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.