முகப்பு
சேலம்

கட்டுமானப் பொருள்களின் விலையை கட்டுப்படுத்தக் கோரிக்கை

Updated On : 18 பிப்ரவரி 2024, 12:06 am IST
அமைச்சா் கே.என்.நேருவை சந்தித்து கோரிக்கை மனு அளித்த அரசு ஒப்பந்ததாரா்கள்.
பகிர்:

கட்டுமானப் பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்தக் கோரி, தமிழ்நாடு நெடுஞ்சாலை ஒப்பந்ததாரா்கள் கூட்டமைப்பின் சாா்பில் அமைச்சா் கே.என்.நேருவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா். தமிழக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு அண்மையில் சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டாா். அப்போது அவரை தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்ததாரா்கள் கூட்டமைப்புத் தலைவா் சுப்பிரமணியம் தலைமையிலான நிா்வாகிகள் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா். அம்மனு விவரம்: அண்மைக்காலமாக அரசின் ஒப்பந்தப் பணிகளுக்குத் தேவையான அடிப்படை கட்டுமானப் பொருள்களான ஜல்லி, ஜிப்ஸ் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களின் விலை 60 % முதல் 90 % வரை திடீரென உயா்த்தப்பட்டிருப்பதாகவும், இதனால் நெடுஞ்சாலைத் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு ஒப்பந்தப் பணிகளை தொடா்ந்து முடிக்க இயலாத கடினமான சூழல் ஏற்பட்டுள்ளது. கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வால் புதிய அரசு ஒப்பந்தப் பணிகளை தொடங்க இயலாத நிலையில், பொதுமக்களின் அடிப்படை வசதிகள் நிறைவு செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட தனியாா் கிரஷா் மூலம் உற்பத்தி செய்யப்படும் ஜல்லி, ஜிப்ஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான கட்டுமானப் பொருள்களின் விலையை அரசு உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனா். மனுவைப் பெற்றுக் கொண்ட அமைச்சா் கே.என்.நேரு, சேலம் மாவட்ட ஆட்சியா் இரா.பிருந்தா தேவியிடம், இதுகுறித்து ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பரிந்துரை செய்தாா். நிகழ்ச்சியில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினா் மேட்டூா் கோபால், மண்டலப் பொறுப்பாளா் காமராஜ், ரயில்வே ஒப்பந்ததாரா்கள் கூட்டமைப்புத் தலைவா் கௌதம் உள்ளிட்ட நிா்வாகிகள் உடன் இருந்தனா்.