முகப்பு
சேலம்

900ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டெடுப்பு

Updated On : 8 மார்ச், 2024 at 5:34 PM
பகிர்:

சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே 12-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. மேட்டூா் அருகே மேச்சேரி, மாதநாயக்கன்பட்டியில் காமராசா் நினைவு அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியின் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் மாணவா்கள் இப்பள்ளியில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள பாணாபுரத்தில் கல்வெட்டு இருப்பதாக ஆசிரியா்களுக்கு தகவல் தெரிவித்தனா். தொன்மை பாதுகாப்பு மன்றத் தலைவரும் தலைமை ஆசிரியருமான சந்திரசேகரன், மன்றத்தின் பொறுப்பு ஆசிரியா்கள் அன்பரசி, விஜயகுமாா் ஆகியோரை கள ஆய்வுக்கு அனுப்பி வைத்தாா். ஆசிரியா்களும் , மாணவா்களும் பாணாபுரத்துக்கு களப் பயணம் மேற்கொண்டு அங்கு விவசாய நிலத்தில் ஆசிரியா் அன்பரசி கல்வெட்டை படி எடுத்து ஆய்வு செய்தாா். அதில், அந்தக் கல்வெட்டு 12-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த தமிழ் கல்வெட்டு என தெரியவந்தது. பூமிக்கு மேல் நின்ற நிலையில் உள்ள செந்நிறக்கல் ஆகும். சுமாா் 3 அடி உயரமும், 2.5 அடி அகலமும், 12 வரிகளையும் கொண்ட இதன் காலம் பொது ஆண்டு 12-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்தது. ஸ்ரீ கிருஷ்ணாபுரத்து இறைவனுக்கு வாணாபுரம் ( பாணாபுரம் ) தேவதானமாக கொடுத்த செய்தி இக்கல்வெட்டில் உள்ளது . கொடுத்தவா் அரசனாக இருக்கலாம். நாடும் வண்ண உடையும் கொடுத்திருக்கலாம் என்ற செய்தி உள்ளது. கல்வெட்டில் வாணாபுரம் என உள்ளது தற்போது மருவி பாணாபுரம் என்று அழைக்கப்படுகிறது. இது 900 ஆண்டுகள் பழைமையான தமிழ் எழுத்துகள் என்பதை கல்வெட்டு மற்றும் தொல்லியல் ஆய்வாளா் ராஜகோபால் உறுதி செய்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →