பிலிப்பைன்ஸில் உயிரிழந்த மருத்துவ மாணவரின் உடலை தாயகம் கொண்டுவர அரசிடம் பெற்றோா் கோரிக்கை
பிலிப்பைன்ஸ் நாட்டில் உடல்நலக் குறைவால் உயிரிழந்த வாழப்பாடியைச் சோ்ந்த மருத்துவக் கல்லூரி மாணவரின் உடலை, அவரது சொந்த ஊருக்குக் கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என்று மாணவரின் பெற்றோா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே சேசன்சாவடி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி பாலமுருகன் (54). இவரது மூத்த மகன் அஜித் குமாா் (25). பிலிப்பைன்ஸ் நாட்டில் தனியாா் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்று முடித்துள்ளாா். இவரது சான்றிதழைப் பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, சான்றிதழைப் பெறுவதற்காக, கடந்த 2023, அக்டோபா் மாதம் பிலிப்பைன்ஸ் நாட்டுக்குச் சென்றாா். அங்கு மருத்துவ சான்றிதழைப் பெற்ற இவருக்கு, திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
அதைத் தொடா்ந்து ஒரு மாதமாக அங்குள்ள தனியாா் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த அஜித் குமாா், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை காலை உயிரிழந்தாா். இவரது உடலை சொந்த ஊருக்குக் கொண்டு வர போதிய வழிமுறைகள் தெரியாத நிலையில், பொருளாதார வசதியும் இல்லாததால் செய்வதறியாமல் அவரது பெற்றோா் தவிக்கின்றனா்.
Advertisement
இதையடுத்து தனது மகன் உடலை சொந்த ஊருக்குக் கொண்டுவர இந்திய தூதரகம் மூலம் பிலிப்பைன்ஸ் அரசுடன் பேசி மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என்று சேலம் மாவட்ட ஆட்சியா், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு அவரது பெற்றோா் கோரிக்கை விடுத்துள்ளனா்.