ஈரான் போர்: 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தைக்குத் தயாராகி வரும் பாகிஸ்தான்!
ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவர இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் தயாராகி வருவது குறித்து...
உலகளாவிய எரிசக்தி விநியோகத்தை முடக்கியுள்ள மேற்கு ஆசியப் போரை முடிவுக்குக் கொண்டுவர இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் தயாராகி வருவதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (ஏப்.17) தெரிவித்தனர்.
ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையே கடந்த பிப்.28 ஆம் தேதி தொடங்கிய போர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர பாகிஸ்தான் தொடர்ந்து மத்தியஸ்தம் செய்துவருகிறது. இதன் ஒருபகுதியாக இஸ்லாமாபாதில் நடந்த 21 மணிநேர பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதனால் பாகிஸ்தான் அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக தீவிர முயற்சிகளை செய்து வருகிறது.
இந்த நிலையில், ஈரான், அமெரிக்கா ஆகிய இரு தரப்பினரையும் மீண்டும் பேச்சுவார்த்தைக்குக் கொண்டுவருவதற்காக, தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக பாகிஸ்தானில் உள்ள அதிகாரிகள் கூறியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
Advertisement
மேலும், இரு தரப்பினரும் இரண்டு வார கால தற்காலிக போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து கடைபிடிப்பதால், இந்த முயற்சிகள் வெற்றி கண்டுள்ளதாகவும், இது பாகிஸ்தான் தனது மத்தியஸ்த முன்னெடுப்பை மீண்டும் தொடங்க வழிவகுத்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் வளைகுடா நாடுகளான சௌதி, கத்தார், துருக்கி ஆகியவற்றுக்கு தனது மும்முனைப் பயணத்தை புதன்கிழமை (ஏப்.15) தொடங்கினார். அதே நாளில், பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி அசீம் முனீா் ஈரானின் தலைநகரான தெஹ்ரானுக்குச் சென்று அங்குள்ள முக்கிய பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசினார்.
இதனிடையே இந்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையானது பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாதில் அடுத்த வாரம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.