ஈரான் போர்: பலத்த பாதுகாப்புகளுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராகி வரும் பாகிஸ்தான் !
ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போரை முடிவுக்குக் கொண்டுவர பலத்த பாதுகாப்புகளுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராகும் பாகிஸ்தான் குறித்து...
ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போரை முடிவுக்குக் கொண்டுவர பலத்த பாதுகாப்புகளுடன் பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் தலைநகரமான இஸ்லாமாபாத் தயாராகி வருகிறது.
ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையே கடந்த பிப். 28 ஆம் தேதி தொடங்கிய தாக்குல்கள் ஒரு முடிவை எட்டாமல் தொடர்ந்த நிலையில், ஈரானுடன் இரண்டு வார கால போர்நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை (ஏப்.8) அதிகாலையில் அறிவித்தார்.
இந்த இரண்டு வார கால தற்காலிக போர் நிறுத்தத்தத்துக்கு பாகிஸ்தான் முக்கிய மத்தியஸ்தராக பங்காற்றியுள்ளது. இதைத் தொடர்ந்து, அனைத்து சர்ச்சைகளையும் தீர்ப்பதற்கான ஒரு ஒப்பந்தத்தை எட்டுவது குறித்த பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, அமெரிக்க மற்றும் ஈரான் தூதுக்குழுக்களுக்கு ஏப்ரல் 10 ஆம் தேதி பாகிஸ்தான் வருமாறு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் அழைப்பு விடுத்தார்.
Advertisement
இந்த நிலையில், 10 பேர் கொண்ட குழு ஈரானிலிருந்து பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் வந்தடையும் என்று தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்த ஒரு பதிவை பாகிஸ்தானுக்கான ஈரான் தூதர் ரெசா அமிரி நீக்கியிருந்த நிலையில் அந்தக் குழு வெள்ளிக்கிழமை இஸ்லாமாபாத் வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தலைமையிலான அமெரிக்க குழுவும், போர் தொடங்குவதற்கு முன்பு ஈரானுடன் பேச்சுவார்த்தைகளை வழிநடத்திய ஜாரெட் குஷ்னர் மற்றும் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோரும் இஸ்லாமாபாத்துக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், பாகிஸ்தானின் தலைநகரமான இஸ்லாமாபாத்தில் 10,000 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், இன்று பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் துணை பிரதமரும் வெளியுறவுத்துறை அமைச்சருமான இஷாக் தார் வெளியிட்ட சமூக ஊடகப்பதிவு ஒன்றில், “இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை 2026 -க்கு வருகைதரும் பிரதிநிதிகள், பத்திரிகையாளர்கள் அனைவரையும் வரவேற்கிறோம். அவர்கள் அனைவரையும் விசா இல்லாமல் பயணிக்க அனுமதி அளிக்குமாறு அனைத்து விமான நிறுவனங்களைக் கேட்டுக்கொள்கிறோம். அவர்கள் பாகிஸ்தான் வந்தடைந்த பிறகு, குடியேற்ற அதிகாரிகளால் விசா வழங்கப்படும்” எனக் குறிப்பிட்டார்.