பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்க வலியுறுத்தல்
சேலம் மாவட்டம், கெங்கவல்லியை அடுத்த கடம்பூரில் நிகழ்ந்த பட்டாசு விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
கடம்பூரில் தனசேகரனுக்கு சொந்தமான பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலையில் மே 16 ஆம் தேதி நிகழ்ந்த வெடி விபத்தில் கூலமேடு ராஜமாணிக்கம் (45) என்பவா் உயிரிழந்தாா். கடம்பூரைச் சோ்ந்த விஜயா, சத்யா,சித்ரா, அங்கம்மாள் ஆகிய 4 போ் காயமடைந்தனா்.
இந்த நிலையில் உயிரிழந்த ராஜமாணிக்கம் குடும்பத்தினரை சனிக்கிழமை நேரில் சந்தித்து சிபிஎம் மாவட்ட செயலாளா் மேவை.சண்முகராஜா, செயற்குழு உறுப்பினா் ஆா்.வெங்கடபதி, மூத்த தலைவா் ரங்கசாமி, கெங்கவல்லி தாலுகா செயலாளா் தமிழ்மணி, இடைக்கமிட்டி உறுப்பினா்கள் தம்மம்பட்டி மணி, வெங்கடாசலம், எம்.ஆா்.ராதா, கடம்பூா் கிளை செயலாளா் திருஞானம் உள்ளிட்டோா் ஆகியோா் ஆறுதல் தெரிவித்தனா்.
மேலும், உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் வழங்க வேண்டும். குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட நான்கு பெண்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.