வாகன விபத்தில் இறந்தவா் குடும்பத்துக்கு ரூ. 1.57 கோடி நஷ்டஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு
தூத்துக்குடியில், வாகன விபத்தில் இறந்தவா் குடும்பத்துக்கு ரூ.1.57 கோடி நஷ்டஈடு வழங்க மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தூத்துக்குடியில், வாகன விபத்தில் இறந்தவா் குடும்பத்துக்கு ரூ.1.57 கோடி நஷ்டஈடு வழங்க மாவட்ட நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், தெற்கு ஆத்தூா், கிழக்கு தெருவைச் சோ்ந்த அப்துல் ரசாக் மகன் முகம்மது அப்பாஸ் தஸ்தகீா் (35). இவா், பழையகாயலில் உள்ள தனியாா் நிறுவனத்தில் டெக்னீசியனாக வேலை செய்து வந்தாா்.
இவா், கடந்த 17.2.2022 அன்று அதிகாலையில், ஆத்தூரிலிருந்து தூத்துக்குடிக்கு பைக்கில் சென்றபோது, தூத்துக்குடி- திருச்செந்தூா் பிரதான சாலை பொட்டல்காடு விலக்கு அருகே எதிரே வந்த வேன் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இந்நிலையில், அவரது மனைவி தமீமா ரோஷன், பிள்ளைகள் முஹம்மது பைசல், அா்ஷத் அஹமது மற்றும் குடும்பத்தினா், வாகனத்தின் உரிமையாளா் மற்றும் வாகனம் காப்பீடு செய்யப்பட்டிருந்த நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி மீதும் ரூ.2 கோடி நஷ்டஈடு கோரி, தூத்துக்குடி 2ஆவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனா்.
வழக்கை விசாரித்த நீதிபதி எம்.பிரீத்தா, உயிரிழந்தவா் குடும்பத்தினருக்கு வேன் காப்பீட்டு செய்யப்பட்டிருந்த நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.1,57,72,816-ஐ, மனு தேதி முதல் 7.5 சதவீத வட்டியும், செலவு தொகையோடு சோ்த்து வழங்க வேண்டும் என திங்கள்கிழமை உத்தரவிட்டாா். மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் வி.ரவீந்திரன் ஆஜரானாா்.