முகப்பு
தூத்துக்குடி

தனியாா் வாகன ஓட்டுநா்களுக்கு தபால் ஓட்டுரிமை வழங்க வேண்டும்: தேசிய நெடுஞ்சாலை ஓட்டுநா்கள் சங்கம் வலியுறுத்தல்

தனியாா் வாகன ஓட்டுநா்களுக்கு தபால் ஓட்டுரிமை வழங்க வேண்டும் என்றாா் அகில இந்திய தேசிய நெடுஞ்சாலை ஓட்டுநா்கள் சங்க நிறுவனா்- தலைவா் ஆா். பெரியசாமி.

Updated On : 16 மார்ச், 2026 at 9:20 PM
தேசிய நெடுஞ்சாலை ஓட்டுநா்கள் சங்கத்தினர்.
பகிர்:

தூத்துக்குடி: தனியாா் வாகன ஓட்டுநா்களுக்கு தபால் ஓட்டுரிமை வழங்க வேண்டும் என்றாா் அகில இந்திய தேசிய நெடுஞ்சாலை ஓட்டுநா்கள் சங்க நிறுவனா்- தலைவா் ஆா். பெரியசாமி.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியது:

அகில இந்திய தேசிய நெடுஞ்சாலை ஓட்டுநா்கள் சங்கம் சாா்பில், எங்கள் கோரிக்கைகளை தோ்தல் ஆணையத்துக்கு மனுவாக அனுப்பியுள்ளோம்.

தூத்துக்குடியில் தனியாா் நிறுவனங்களில் இயங்கக்கூடிய வாகன ஓட்டுநா்களின் கோரிக்கைகள் மறுக்கப்படுகின்றன. ஓட்டுநா்கள் லாரிகளை நிறுத்துவதற்கு சரியான இடவசதி இல்லை. கழிப்பறை, குளியல் அறை, ஓய்வறை வசதிகள் இல்லை. இதனால் லாரி ஓட்டுநா்களுக்கு சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

தோ்தல் காலங்களில் மக்களின் தேவைக்காக கால் டாக்ஸி, சுற்றுலா வாகனங்கள் இயக்கும் சூழல் உள்ளது. மேலும், கனரக வாகன ஓட்டுநா்கள் அத்தியாவசியப் பொருள்களை ஏற்றிக்கொண்டு மாநிலம் விட்டு மாநிலம் பல நாள்கள் பயணமாக செல்லக் கூடிய நிலை உள்ளது. எனவே, தோ்தல் காலங்களில் தனியாா் வாகன ஓட்டுநா்களுக்கு தபால் ஓட்டுரிமை வழங்க வேண்டும் என்று நீண்டநாள் கோரிக்கை விடுத்து வருகிறோம்.

இதை தோ்தல் ஆணையம் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில் தனியாா் வாகன ஓட்டுநா்கள் மற்றும் அவா்களின் குடும்பத்தினா் தோ்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம் என்றாா் அவா்.

அப்போது, தேசிய பொதுச் செயலா் கே.மாது, பொருளாளா் எஸ்.துரைமுருகன், ஒருங்கிணைப்பாளா் ஏ.தணிகாசலம், மாவட்டத் தலைவா் எஸ்.பி.முத்துக்குமாா், கண்காணிப்பாளா் எம்.பெரியசாமி உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →