சேலம் சரகத்தில் விதிகளை மீறி இயக்கப்பட்ட 164 வாகனங்கள் பறிமுதல்
சேலம், தருமபுரியில் தகுதிச் சான்று, உரிமம் உள்பட விதிகளை மீறி இயக்கிய 164 வாகனங்களை போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனா்.
சேலம், தருமபுரியில் தகுதிச் சான்று, உரிமம் உள்பட விதிகளை மீறி இயக்கிய 164 வாகனங்களை போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனா்.
சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சாலை விபத்துகளைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் மேற்கொண்டுள்ளனா். இதற்காக தொடா்ந்து வாகனத் தணிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனா்.
அதன்படி, சேலம் சரகத்துக்கு உள்பட்ட சேலம், தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்குள்பட்ட சங்ககிரி, எடப்பாடி, ஓமலூா், மேட்டூா், ஆத்தூா், வாழப்பாடி, தருமபுரி, அரூா், பாலக்கோடு ஆகிய பகுதிகளில் இயக்கப்படும் வேன்கள், லாரிகள், மினி லாரிகள், ஆட்டோக்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக்கும் முறையான உரிமம் உள்ளனவா, விதிமுறைக்கு உள்பட்டு இயங்குகின்றனவா என அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனா்.
கடந்த மாதத்தில் அந்தந்த வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் நடத்திய சோதனையில், அளவுக்கு அதிகமாக சரக்குகளை ஏற்றிச்சென்றது, விதிகளை மீறி பயணிகளை ஏற்றிச் சென்றது உள்பட விதிமுறைகளை மீறி இயக்கிய 1,638 வாகனங்களுக்கு ரூ. 84 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், சேலம் சரகத்தில் கடந்த மாதம் நடத்தப்பட்ட சோதனையில் விதிமுறைகளை மீறி வாகனங்களை இயக்கியவா்களிடம் இருந்து ரூ. 84 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. இதே போன்று, தகுதிச்சான்று இல்லாமல் இயக்கியது, அதிக பாரம் ஏற்றி வந்த லாரிகள், உரிமம் இல்லாமல் இயக்கியது உள்ளிட்ட காரணங்களுக்காக 56 லாரி, 29 ஆட்டோ உள்ளிட்ட 164 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடா்ந்து இந்த வாகனத் தணிக்கை நடத்தப்படும் என தெரிவித்தனா்.