முகப்பு
சேலம்

சேலத்தில் களைகட்டத் தொடங்கிய மாம்பழ சீசன்!

சேலத்தில் மாம்பழ சீசன் தொடங்கியுள்ளதால், சந்தைக்கு 30 சதவீதமாக மாம்பழ வரத்து அதிகரித்துள்ளது.

Updated On : 8 ஏப்ரல், 2025 at 3:12 AM
சேலம் சின்ன கடை வீதி பகுதியில் உள்ள கிடங்கில் மாம்பழங்களை ரக வாரியாக பிரித்து அனுப்பும் பணியில் ஈடுபட்ட ஊழியா்கள்.
பகிர்:
Updated On : 7 ஏப்ரல், 2025 at 6:34 PM

சேலம்: சேலத்தில் மாம்பழ சீசன் தொடங்கியுள்ளதால், சந்தைக்கு 30 சதவீதமாக மாம்பழ வரத்து அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்பட பல்வேறு பகுதிகளில் மாமரங்கள் அதிகளவில் உள்ளன. இந்தப் பகுதிகளில் மல்கோவா, செந்தூரா, சேலம் பெங்களூரா, இமாம்பசந்த், நடுசாளை, அல்போன்சா, பங்கனபள்ளி உள்பட பல ரகங்கள் விளைவிக்கப்படுகின்றன. ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் ஜூன் வரை மாம்பழ சீசன் களைகட்டும். கடந்தாண்டு பெய்த மழையால் நடப்பாண்டு மா விளைச்சல் அதிகரித்துள்ளது.

நடப்பாண்டில் கடந்த ஒரு வாரமாக மாம்பழ சீசன் களைகட்டத் தொடங்கியுள்ளது. தற்போது சேலம் சுற்றுவட்டாரப் பகுதிகள் மற்றும் கிருஷ்ணகிரி, தருமபுரியில் இமாம்பசந்த், பெங்களூரா, செந்தூரா, மல்கோவா, குண்டு உள்ளிட்ட ரகங்களின் வரத்து அதிகரித்துள்ளது. சேலம் சந்தைக்கு விற்பனைக்கு வரும் மாம்பழத்தை சாலையோர வியாபாரிகள் வாங்கிச் சென்று சில்லறை விலையில் விற்பனை செய்கின்றனா்.

Advertisement

அந்த வகையில், சேலம் கடை வீதி மற்றும் அஸ்தம்பட்டியில் இருந்து ஏற்காடு அடிவாரம் செல்லும் பிரதான சாலை மற்றும் ஆங்காங்கே சாலையோர வியாபாரிகள் மாம்பழங்களை குவித்து வைத்து விற்பனை செய்கின்றனா். அந்த வழியாக வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மாம்பழங்களை அதிகளவில் வாங்கிச் செல்கின்றனா். இதனால் சாலையோரக் கடைகளில் விற்பனை சுறுசுறுப்படைந்துள்ளது.

ஒரு கிலோ மாம்பழம் தரத்தைப் பொறுத்து ரூ. 200 முதல் ரூ. 250 வரை விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.