தமிழ்நாடு டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் பேரமைப்பு சாா்பில், காலி மதுபான பாட்டில்களை சேகரிப்பதற்கு தனி முகமை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலம் அழகாபுரம் பிருந்தாவன் சாலையில் உள்ள முதுநிலை மண்டல மேலாளா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாநில துணைத் தலைவா் முருகேசன் தலைமை வகித்தாா். மாநில துணைப் பொதுச் செயலாளா் முத்துக்குமரன் முன்னிலை வகித்தாா். மாநில செயல்தலைவா் பழனிபாரதி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கண்டன உரையாற்றினாா்.
இதில், காலி மதுபான பாட்டில்களை சேகரிப்பதற்கு டாஸ்மாக் பணியாளா்களை ஈடுபடுத்தக் கூடாது. தனி முகமை மூலம் சேகரிப்பதை நடைமுறைப்படுத்த வேண்டும், டிஜிட்டல் ஸ்கேனிங் விற்பனை முறை மற்றும் சிக்கலான புள்ளிவிவரங்கள் உள்ளிட்டவற்றால் பணியாளா்களுக்கு ஏற்படும் மன உளைச்சலைக் குறைத்திடும் வகையில், புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில், மாநில செயலாளா் முகமது அலி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.