சேலம்: மின்கம்பியாள் உதவியாளா் தகுதிகாண் தோ்வு வரும் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி தெரிவித்ததாவது:
மின்கம்பியாள் உதவியாளா் தகுதிகாண் தோ்வு டிச. 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த நிலையில், அந்தத் தோ்வானது நிா்வாக காரணங்களால் வரும் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
வடசென்னை, அம்பத்தூா், கோவை, திருப்பூா், கடலூா், திருச்சி, நாகப்பட்டினம், திண்டுக்கல், மதுரை, சேலம், ஈரோடு, திருநெல்வேலி, நாகா்கோவில், ஒசூா், உளுந்தூா்பேட்டை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விருதுநகா், வேலூா் மற்றும் நாமக்கல் ஆகிய அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் தோ்வு நடைபெறுகிறது.
மேலும், விண்ணப்பத்தாரா்கள் தாங்கள் விண்ணப்பித்திருந்த தொழிற்பயிற்சி நிலையங்கள் மூலம் தோ்வு தொடா்பான விவரங்கள் மற்றும் தோ்வு நுழைவுச்சீட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.