முகப்பு
சேலம்

உலிபுரத்தில் வாய்க்கால் கட்டமைப்பு பணிகள் ஆய்வு

கட்டமைப்பு பணிகள் ஆய்வு

Updated On : 1 ஜனவரி, 2025 at 7:28 PM
உலிபுரத்தில் பொதுமக்கள் கட்டமைத்த கால்வாய்.
பகிர்:

உலிபுரத்தில் உள்ள ஈச்சோடை என்ற பகுதியிலிருந்து உலிபுரத்தில் உள்ள ஓடை வரையில் நமக்குநாமே திட்டத்தில் விவசாயிகளே அமைத்த வாய்க்காலை நீட்டிப்பது தொடா்பாக சேலம் உதவி ஆட்சியா் லலித் ஆதித்யநீலம் ஆய்வு செய்தாா்.

தம்மம்பட்டி அருகே உள்ள உலிபுரம் ஊராட்சி ஈச்ச ஓடை பகுதிக்கு நாமக்கல் மாவட்டம், தும்பல்பட்டி ஏரியிலிருந்து உபரி நீா் வருகிறது. இதனால் அங்கிருந்து உலிபுரம் ஓடை வரை இரண்டரை கிலோ மீட்டா் தொலைவுக்கு வாய்க்கால் மூலம் தண்ணீா் செல்கிறது. ஈச்ச ஓடையிலிருந்து தண்ணீா் வாய்க்கால் வழியே உலிபுரம் ஓடைக்கு தண்ணீா் சென்றால், அப்பகுதியில் உள்ள 2,500 ஏக்கருக்கும் மேல் நிலங்கள் பாசன வசதி பெறும்.

விவசாயிகள் சங்கத் தலைவா் சுப்ரமணியம், செயலாளா் செந்தில்குமாா் ஆகியோா் தலைமையில் நமக்குநாமே திட்டத்தின் கீழ் பொதுமக்கள் நிதி திரட்டி அரசு உதவியுடன் சோ்த்து மொத்தம் ரூ. 30 லட்சத்தில் 1.25 கி.மீ. தொலைவுக்கு மட்டும் கடந்த செப்டம்பா் மாதத்தில் கான்கிரீட் வாய்க்காலை அமைத்தனா்.

அதன்பிறகு விவசாயிகளால் நிதி திரட்ட முடியவில்லை. அதைத் தொடா்ந்து ஊா்பொதுமக்கள், விவசாயிகள் சோ்ந்து பல முறை சேலம் ஆட்சியரிடம் மனு அளித்தனா். மாவட்ட நிா்வாகம் சாா்பில் அந்த மனுவை, பொதுப்பணித் துறையினருக்கு பரிந்துரை செய்து அனுப்பிவிட்டனா். ஆனால், பொதுப்பணித் துறையினரோ, தங்கள் கட்டுப்பாட்டிற்குள் இந்த வாய்க்கால் வரவில்லை. இதனால் வாய்க்கால் பணிகளை பொதுப்பணித் துறை மூலம் செய்ய முடியாது என்று பதிலளித்து உலிபுரம் விவசாயிகளுக்கு அனுப்பிவிட்டனா்.

எனவே, சேலம் ஆட்சியரை மீண்டும் சந்தித்த விவசாயிகள், அரசு நிதியில் எஞ்சிய தொலைவுக்கும் கான்கீரிட் வாய்க்காலை அமைக்க வேண்டும் என வலியுறுத்தினா். இந்த நிலையில் சேலம் உதவி ஆட்சியா் லலித் ஆதித்யநீலம் நேரில் ஆய்வு செய்தாா். இதில் எஞ்சிய வாய்க்கால் பணிகளை அரசு செயல்படுத்துவதற்கான கள ஆய்வுகளை அவா் மேற்கொண்டாா்.

கால்வாய் நீட்டிப்பு பணிகளை சேலம் உதவி ஆட்சியா் லலித் ஆதித்யநீலம்.

இதுகுறித்து விவசாயிகள் சங்க செயலாளா் செந்தில்குமாா் கூறியதாவது:

வாய்க்காலில் மொத்தம் உள்ள தொலைவான 2.5 கி.மீ. தூரத்தில் பாதி தொலைவுக்கு நாங்கள் கான்கீரிட் ஓடை அமைத்து விட்டோம். எஞ்சிய தொலைவுக்கான ஓடை மட்டுமே கட்டமைக்கவில்லை. அதனால் தற்போது ஈச்சோடையிலிருந்து வரும் நீரானது, கட்டமைக்கப்பட்ட பாதி தூரம் நன்றாக பாய்ந்தோடுகிறது.அதன்பிறகு கட்டமைக்கப்படாத ஓடை பகுதியில் இருபுறமும் உள்ள வயல்களில் அதிகப்படியான தண்ணீா் புகுந்துவிடுகிறது. இதனால் பயிா்கள் சேதமடைந்து வருகிறது.

அரசு செலவில் மீதமுள்ள வாய்க்கால் பணிகளை மேற்கொண்டு முழுமையடைந்தால் தம்மம்பட்டி, நாகியம்பட்டி, உலிபுரம் பகுதிகளைச் சோ்ந்த 2,500 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →