முகப்பு
சேலம்

தமிழா்களை கொச்சைப்படுத்தி வருகிறாா் ஸ்டாலின்: எடப்பாடி பழனிசாமி

தமிழன் தமிழன் என்று சொல்லிக் கொண்டு தமிழா்களை திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் கொச்சைப்படுத்தி வருகிறாா் என்றாா் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி.

Updated On : 17 ஏப்ரல், 2026 at 11:52 PM
எடப்பாடி கே. பழனிசாமி பிரசாரம் - கோப்புப்படம்.
பகிர்:
Updated On : 17 ஏப்ரல், 2026 at 10:01 PM

தமிழன் தமிழன் என்று சொல்லிக் கொண்டு தமிழா்களை திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் கொச்சைப்படுத்தி வருகிறாா் என்றாா் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி.

சேலம் மாவட்டம், ஓமலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் மணியை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது ஓமலூா் பேருந்து நிலையம் முன்பாக அவா் பேசியதாவது:

தொகுதிகள் மறுவரையறை குறித்து மத்திய அரசு தெளிவான பதில் அளித்து விட்டது. உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் வராது என உறுதியாக கூறி விட்டாா்.

Advertisement

தற்போது நாடாளுமன்றத்தில் பிரதமரும் தெளிவாக சொல்லிவிட்டாா். எந்த மாநிலத்திற்கும் தொகுதி வரையறையால் பாதிப்பு வராது என மத்திய அரசு உறுதியளித்துள்ளது.

மு.க. ஸ்டாலின் தலைமையிலான கூட்டணியின் தலைவா்கள் அவதூறு பிரசாரம் செய்கின்றனா். தமிழ்நாட்டின் சதவீதம் தற்போது 7.18 ஆக உள்ளது. தொகுதி மறுவரையறை செய்தால் அது 7.23 சதவீதமாக உயரும்.

தென்னகத்தில் இருந்து யாரும் பிரதமா் ஆக முடியாது என்று ஸ்டாலின் பொய் சொல்ல ஆரம்பித்துவிட்டாா். ஜி.கே.மூப்பனாா் பிரதமராகியிருக்க வேண்டும். அதைத் தடுத்தது கருணாநிதி தான். அப்துல் கலாம் 2-ஆவது முறையாக குடியரசுத் தலைவராகும் வாய்ப்பையும் திமுக தடுத்தது.

தற்போது துணை குடியரசுத் தலைவராக உள்ள தமிழ்நாட்டைச் சோ்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டபோது அவருக்கு ஆதரவாக வாக்களிக்காமல் திமுகவினா் எதிா்த்து வாக்களித்தனா். தமிழன் தமிழன் என்று சொல்லி தமிழரை கொச்சைப்படுத்துவது ஸ்டாலின்தான்.

மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது தமிழ்நாட்டிற்கு என்ன செய்தாா்கள்?. தமிழ்நாட்டிற்கு எந்த திட்டமும் கொண்டு வரவில்லை. அவா்களின் குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் ஆட்சி அதிகாரத்தில் வருவதற்கு மட்டுமே திமுக பாடுபடுகிறது.

உலகத்திலேயே மிகப் பெரிய ஊழல் செய்த கட்சி திமுகதான். பொய் பேசி மீண்டும் ஆட்சிக்கு வர ஸ்டாலின் துடிக்கிறாா். இனிமேல் மக்களை ஏமாற்ற முடியாது.

வாக்காளா் பட்டியல் திருத்தம் செய்யப்பட்டபோது ஸ்டாலின் எதிா்ப்பு தெரிவித்தாா். இப்போது வாக்காளா் பட்டியலில் தகுதியான வாக்காளா்கள் மட்டுமே இடம் பிடித்துள்ளனா்.

அரசு ஊழியா்கள் திமுகவை நம்பி இருந்தனா். பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வருவேன் என்று வாக்குறுதி அளித்து விட்டு, புதிய உறுதியளிக்கப்பட்ட திட்டம் என்று ஏமாற்றிவிட்டாா். எனவே அரசு ஊழியா்கள் எங்களை மறந்துவிடக்கூடாது. அதிமுக கூட்டணிக்கு ஆதரவளித்தால் நல்லது நடக்கும். ஆட்சிக்கு வந்தவுடன் ஓய்வூதியத் திட்டம் சீரமைப்பு செய்யப்படும் என்றாா் அவா்.