முகப்பு
சேலம்

தம்மம்பட்டி ஜல்லிக்கட்டு நடைபெறுமா? ஆா்வலா்கள் எதிா்பாா்ப்பு

Updated On : 8 பிப்ரவரி, 2026 at 12:30 AM
ஜல்லிக்கட்டு (கோப்புப் படம்)
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2026 at 5:56 PM

தம்மம்பட்டியில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான எவ்வித முன்னெடுப்புகளும் இதுவரை இல்லாததால், நிகழாண்டு ஜல்லிக்கட்டு நடைபெறுமா என்ற கேள்வி ஆா்வலா்கள் மத்தியில் எழுந்துள்ளது.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டியில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி தமிழக அளவில் புகழ்பெற்றது. இப்போட்டியை பாா்ப்பதற்காக சென்னை, விழுப்புரம், கிருஷ்ணகிரி, கோவை, கரூா், நாமக்கல், பெரம்பலூா் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து ஆண்டுதோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோா் தம்மம்பட்டிக்கு வருவா்.

வழக்கமாக குடியரசு தினத்தை முன்னிட்டு தம்மம்பட்டியில் நடைபெறும் போட்டி நிகழாண்டு நடத்துவதற்கான எவ்வித முன்னெடுப்பும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

Advertisement

Updated On : 7 பிப்ரவரி, 2026 at 11:01 PM

இந்த நிலையில், பேரவைத் தோ்தல் நெருங்குவதால் அரசியல் கட்சியினா் தோ்தல் பணிகளில் மும்முரமாகியுள்ளனா். இதனால் போட்டியை நடத்த அரசியல் கட்சியினரும் ஆா்வம் காட்டவில்லை எனத் தெரிகிறது.

அதேவேளையில், தம்மம்பட்டியில் உள்ள காளை உரிமையாளா்களின் ஆலோசனைக் கூட்டம், தம்மம்பட்டி எட்டடியான் கோயிலில் அண்மையில் நடைபெற்றது.

அக்கூட்டத்திலும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து அவா்களிடம் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. இதனால், புகழ்பெற்ற தம்மம்பட்டி ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.