ஹாட்ரிக் அடிப்பாரா பினராயி? இதுவரை நடந்திராத தேர்தல் சாதனை!
கேரள தேர்தலில் ஹாட்ரிக் அடிப்பாரா பினராயி என்ற கேள்வி எழுந்துள்ளது.
கேரள சட்டப்பேரவைக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், கேரளத்தில் இதுவரை நடக்காத சாதனையாக ஹாட்டிக் அடிப்பாரா பினராயி விஜயன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
கேரளத்தில் அனல் பறந்து வந்த தேர்தல் பிரசாரம் ஏப். 7ஆம் தேதியுடன் நிறைவு பெற்று, இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மிகவும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், மக்களும் அதிகளவில் வாக்குகளை செலுத்தி வருகிறார்கள்.
இந்த தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்) கட்சியை வீழ்த்தி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) ஆட்சியைப் பிடிக்க தீவிர பிரசாரம் செய்து வருகிறது. இவர்களுடன் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள் உள்பட 883 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
Advertisement
கடந்த 1977ஆம் ஆண்டுக்குப் பிறகு கேரளத்தில் கடந்த 2021ஆம் ஆண்டுதான், இடதுசாரி ஜனநாயக முன்னணி தொடர்ச்சியாக இரண்டாவது முறை ஆட்சியைப் பிடித்து கேரளத்தில் சாதனை படைத்திருந்தது. 1977ஆம் ஆண்டுக்குப் பிறகு, கேரளத்தில் ஏற்கனவே ஆண்ட கட்சி, அடுத்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்காத நிலையில், அந்த சாதனையை நிகழ்த்திக் காட்டினார் பினராயி விஜயன்.
தற்போது, அடுத்த எதிர்பார்ப்பாக, கேரளத்தில் இதுவரை நடந்திராத வகையில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்று கேரளத்தில் ஆட்சியைத் தக்க வைப்பாரா பினராயி விஜயன் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுவரை, கேரளத்தில் தொடர்ச்சியாக மூன்றாவது முறை எந்தக் கட்சியும் ஆட்சியமைத்ததேயில்லை.
எனவே, பினராயி விஜயன் அந்த சாதனையைப் படைப்பாரா என்பதே பேசுபொருளாக உள்ளது.
இதுவரை வெளியான கருத்துக் கணிப்புகள், ஆளும் இடதுசாரி முன்னணிக்கும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என்றே கூறியிருக்கிறது. இவ்விரண்டு கட்சிகளுக்கு இடையே போட்டி நிலவினால், பாஜக ஆதரவு அளிக்கும் கூட்டணிக்கு ஆட்சியமைக்கும் வாய்ப்பு கிடைக்குமா என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன.
ஏற்கனவே, இருக்கும் ஆட்சி போதும் என மக்கள் நினைப்பார்களா? மாற்றத்தை விரும்புவார்களா? பினராயி புதிய சாதனை படைப்பாரா என்பதெல்லாம் மே 4ஆம் தேதி தெரிய வரும்.