🔴கேரளம்: பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!
கேரளம் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடர்பான செய்திகள் தினமணி இணையத்தில் நேரலையில்...
கேரளமே வெளியே வாருங்கள் : ராகுல்
கேரள மக்கள் அனைவரும் வீட்டைவிட்டு வெளியே வந்து எதிர்காலத்துக்காக வாக்களியுங்கள் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ராகுல் காந்தி பதிவிட்டுள்ளதாவது:
''கேரளமே வெளியே வாருங்கள், மக்களின் குரலுக்குச் செவிசாய்க்கும், அக்கறை கொள்ளும், வாக்குறுதிகளை நிறைவேற்றும் ஓர் அரசுக்காக வாக்களியுங்கள். ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு வாக்களியுங்கள். நீதிக்கும், சிறந்த எதிர்காலத்திற்கும் வாக்களியுங்கள்'' என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
Advertisement
9 மணி நிலவரம் - 16.23% வாக்குப்பதிவு
கேரளத்திற்கு காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், 9 மணி நிலவரப்படி, 16.23 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் 17.41 சதவிகிதம் மற்றும் அஸ்ஸாமில் 17.87 சதவிகிதம் பேர் வாக்களித்துள்ளனர்.
பொய் பிரசாரத்தால் வீழ்த்த முடியாது
பொய்ப் பிரசாரத்தால் இடது ஜனநாயக முன்னணி கூட்டணியை வீழ்த்த முடியாது என்று கேரள முதல்வர் பினராயில் விஜயன் தெரிவித்தார்.
பொய்ப் பிரசாரத்தால் இடது ஜனநாயக முன்னணி கூட்டணியை வீழ்த்த முடியாது. நாங்கள் எப்போதும் மக்களை நம்புகிறோம்; மக்களும் எங்களை நம்புகிறார்கள்.
கடந்த பத்து ஆண்டுகளாக நாங்கள் மக்களுடன் இணைந்து பயணித்து வருகிறோம். அந்தப் பயணம் தொடர வேண்டும். நாங்கள் மக்களுடன் இருக்கிறோம். மக்களும் எங்களுடன் இருக்கிறார்கள். மதவாதப் பிரச்சாரத்தால் எங்களை வீழ்த்த முடியாது
வாக்களித்த காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர்
பரவூர் சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வி.டி. சதீஷன், கேசரி அரசு அறிவியல் மற்றும் கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்தினார்.
100 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி
கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் 100 தொகுதிகளுக்கு மேல் ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி வெற்றி பெறும் என சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் வேட்பாளருமான வி.டி. சதீஷன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களுடன் பேசிய வி.டி. சதீஷன்,
''பிரசாரத்தில் கூறியதைப்போலவே ஐக்கிய ஜனநாயக முன்னணி, 100 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும். ஒரு காலத்தில் எங்களுக்கு ஒரு சிறிய பெரும்பான்மையைக்கூட வழங்கத் தயங்கியவர்கள், இப்போது தங்கள் மனதை மாற்றிக்கொண்டுள்ளனர். ஆதரவு கணிசமாக அதிகரித்துள்ளது எனக் குறிப்பிட்டார்.
வாக்களித்தார் பினராயி விஜயன்
கேரள சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி முதல்வர் பினராயி விஜயன் கன்னூர் தொகுதியில் தனது வாக்கை செலுத்தினார். கன்னூர் தொகுதியில் உள்ள ஆர்.சி. அமலா ஆரம்பப் பள்ளியில் வாக்களித்தார்.
இதேபோன்று திருவனந்தபுரம் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியில் கேரள மாநில பாஜக தலைவர் ராஜீவ் சந்திர சேகர் வாக்களித்தார்.
வாக்களித்தார் சுரேஷ் கோபி
மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி குருவாயூர் தெற்கு தொகுதியில் தனது வாக்கை செலுத்தினார். மக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
வரிசையில் காத்திருந்து வாக்களித்த மோகன் லால்!
திருவனந்தபுரம், மூடவன்முகலில் உள்ள வாக்குச்சாவடிக்கு, நேமம் தொகுதியின் அமைச்சரும் இடது ஜனநாயக முன்னணி வேட்பாளருமான வி. சிவன்குட்டி, வாக்கு செலுத்தினார். அதே வாக்குச்சாவடியில் நடிகர் மோகன் லால் வாக்கு செலுத்தினார்.
பெண்கள், இளைஞர்களுக்கு மோடி வேண்டுகோள்
பிரதமர் மோடியின் எக்ஸ் தளப் பதிவு:
''2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பெருந்திரளான வாக்குப்பதிவு நடைபெறுவதை உறுதிசெய்யுமாறு கேரள மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.
சாதனை அளவிலான வாக்குப்பதிவு, கேரளத்தின் ஜனநாயக உணர்விற்கு புத்துணர்ச்சி அளிக்கும். குறிப்பாக, மாநிலத்தின் இளைஞர்களும் பெண்களும் முன்வந்து வாக்களிக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்'' என பிரதமர் பதிவிட்டுள்ளார்.
வாக்காளர்கள் அமர இருக்கைகள்
மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். கோடை காலத்தையொட்டி வாக்குப் பதிவு நடைபெறுவதால், கேரள வாக்குச் சாவடிகளில் வாக்காளர்கள் அமர இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
முக்கிய வேட்பாளர்களின் தொகுதிகள்
முதல்வர் பினராயி விஜயன் (தர்மடம் தொகுதி), காங்கிரஸை சேர்ந்த பேரவை எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் (பரவூர் தொகுதி), மாநில பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் (நேமம் தொகுதி) உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்களாவர்.
140 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு
கேரளத்தில் 140 தொகுதிகளுக்கும் பலத்த பாதுகாப்புடன் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் பாஜக என மும்முனைப் போட்டி நிலவுகிறது.
முதல்வர் பினராயி விஜயன், எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன் மற்றும் பாஜகவின் ராஜீவ் சந்திரசேகர் உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்களாவர்.
கேரளத்தில் இன்று வாக்குப் பதிவு
கேரள மாநிலத்திற்கு இன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. 140 தொகுதிகளைக் கொண்ட கேரளத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2.71 கோடியாகும் (ஆண்கள் 1.32 கோடி, பெண்கள் 1.39 கோடி, மூன்றாம் பாலினத்தவர் 273).