2021 தேர்தல் வாக்குறுதிகளில் 97% நிறைவேற்றம்: பினராயி விஜயன்
2021 ஆம் ஆண்டு தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளில் 97% நிறைவேற்றி விட்டதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தது குறித்து...
2021 ஆம் ஆண்டு தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளில் 97% நிறைவேற்றி விட்டதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் செவ்வாய்க்கிழமை (ஏப்.7) தெரிவித்துள்ளார்.
கேரளத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி நடைபெற உள்ளது. இடது ஜனநாயக முன்னணி, ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆகியவற்றுக்கிடையே மும்முனைப்போட்டி நிலவுகிறது. அனைத்துக் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பிலும், தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தல் பிரசாரத்துக்கான கால அவகாசம் செவ்வாய்க்கிழமை (ஏப்.7) மாலை 6 மணியுடன் நிறைவடையும் நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், “தேர்தல் பிரசாரத்துக்கான நாள்கள் குறைந்த அளவில் இருந்தபோதிலும், இடது ஜனநாயக முன்னணிக்கு (எல்.டி.எஃப்.) கேரள மக்கள் பெரிதும் ஆதரவளிக்கின்றனர். அவர்களிடத்தில் ஆட்சிக்கு எதிரான மனநிலை இல்லை. மக்களிடம் ஆட்சிக்கு எதிரான மனநிலை இல்லாதது மற்ற கட்சிகளுக்கு ஏமாற்றம் அளித்திருக்கிறது.
Advertisement
2021 ஆம் ஆண்டு எல்.டி.எஃப். அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் 97 சதவிகிதத்தை நிறைவேற்றிவிட்டோம். கடந்த பத்து ஆண்டுகளாக வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களை வெற்றிகரமாக அரசு ஒருங்கிணைத்துள்ளது.
வளர்ச்சிக்கான நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசின் பங்கில் 75% மாநில அரசே சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது வளர்ச்சி, நிலைத்தன்மை மற்றும் சமூக நீதியை பாதிக்கிறது.
ஆளும் கட்சிக்கு எதிராக அல்லாமல், தற்போது எதிர்க்கட்சிகள் மீதுதான் ஊழல் குற்றச்சாட்டுகள் அதிகம் எழுப்பப்படுகின்றன. கேரளத்துக்குத் தீங்கு விளைவிக்கும் முடிவுகளை மத்திய அரசு எடுத்தபோதும், தொழிலாளர்களுக்கு எதிரான நிலைப்பாடுகளை மேற்கொண்டபோதும் காங்கிரஸ் மௌனம் காத்தது” எனத் தெரிவித்தார்.