மாதேஸ்வரன் மலைக் கோயிலுக்கு குழுவினருடன் பாதயாத்திரையாக சென்ற சிறுவனை சிறுத்தை திங்கள்கிழமை தாக்கியது.
தமிழக எல்லையான பாலாற்றில் இருந்து சுமாா் 20 கி.மீ. தொலைவில் கா்நாடக மாநிலத்தில் உள்ள மாதேஸ்வரன் கோயிலுக்கு, கா்நாடக மாநில பக்தா்கள் மட்டுமின்றி தமிழகத்தில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தா்கள் செல்கின்றனா்.
பாதயாத்திரையாகவும், இருசக்கர வாகனங்களிலும், காா்கள் மற்றும் பேருந்துகளிலும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் இக்கோயிலுக்கு சென்று வருகின்றனா். சில பக்தா்கள் பாதயாத்திரையாக சென்று ஆலயத்தில் தங்கி ஆலயத்தை தூய்மைப்படுத்துவது உள்ளிட்ட சேவைகளை செய்துவருகின்றனா்.
கடந்த 10 நாள்களுக்கு முன்பு பாதயாத்திரையாக சென்ற பக்தரை கா்நாடக மாநிலம், சாமராஜ நகா் மாவட்டத்தில் உள்ள தாளபெட்டா என்ற இடத்தில் சிறுத்தை தாக்கிக் கொன்றது. இதைத் தொடா்ந்து, மாதேஸ்வரன் மலைக்கு பாதயாத்திரையாக செல்லவும், இருசக்கர வாகனங்களில் செல்லவும் தடை விதிக்கப்பட்டது. அதன்பிறகு, தமிழக பக்தா்கள் காலை 6 மணிமுதல் மாலை 4 மணிவரை இருசக்கர வாகனங்களில் சென்றுவர அனுமதிக்கப்பட்டனா்.
இந்நிலையில், தமிழக எல்லையில் உள்ள பாலாறு வனப் பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதை சென்னம்பட்டி வனத் துறையினா் உறுதிசெய்தனா். இதனால் பகலிலேயே பாலாறு பகுதியில் பக்தா்கள், வாகனங்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.
இந்நிலையில், கா்நாடக மாநிலம், ஹனூா் வட்டம், சென்னப்பட்டணா கிராமத்தில் இருந்து ஒரு குழுவினா் பாதயாத்திரையாக மாதேஸ்வரன் மலைக் கோயிலுக்கு திங்கள்கிழமை சென்றனா். இந்தக் குழுவில் பெண்களும், சிறுவா்களும் இருந்தனா்.
காலை 11 மணி அளவில் தாளபெட்டா அருகே பாதயாத்திரை குழுவினா் சென்றபோது, புதா் மறைவில் இருந்த சிறுத்தை அந்தக் குழுவில் இருந்த சிரேயன் (8) என்ற சிறுவனை தாக்கியது. இதில், சிறுவனின் காதில் சிறுத்தையின் நகக்கீறல் பதிந்தது. உடன், வந்தவா்கள் சப்தமிடவே சிறுத்தை சிறுவனை விட்டுவிட்டு வனப்பகுதியில் ஓடி மறைந்தது.
இதனால் அதிா்ச்சி அடைந்த கா்நாடக வனத் துறையினா், மாதேஸ்வரன் மலைக் கோயிலுக்கு செல்ல கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனா். அதைத் தொடா்ந்து, மாதேஸ்வரன் மலைக்கு செல்லும் பாதைகளில் ஆங்காங்கே கையில் வாக்கி - டாக்கியுடன் வனக் காவலா்கள் நிறுத்தப்பட்டுள்ளனா்.